Thursday, February 24, 2005

நினைவுத் தடங்கள் - 30

எங்கள் ஐயா சாமினாத ஐயர் பிள்ளைகளுக்கு, படிப்பில் சிம்ம சொப்பனந்தான் என்றாலும் அவரிடம் கலைநெஞ்சம் இருந்தது. வெறும் எண்ணையும் எழுத்தையும் மட்டும் அவர் கற்பிக்கவில்லை. கோலாட்டம், நாடகம் போன்ற கலைகளையும் அவர் கற்பித்தார். சதா கடுகடுப்பும் ஒரு சின்னத் தப்பு செய்துவிட்டால் கூடப்பொறுக்காத முன்கோபமும் அவரிடம் இருந்ததை, ஊர்மக்கள் ஒரு குறை போலவும் அதுவே அவரது பெருமை போலவும் பேசினார்கள். 'பிரம்மச்சாரிதானே? பிள்ளை குட்டி பெற்றிருந்தால் தானே பிள்ளைங்க அருமை தெரியும்?' என்றும் 'இப்படியும் கண்டிப்பு இல்லேண்ணா படிப்பு எப்படி வரும்?' என்றும் பேசுவார்கள். படிப்புக்கிடையே அவர் விஜய தசமியை ஒட்டி பிள்ளைகளுக்ககு கோலாட்டம் கற்பிப்பதை மன இறுக்கத்து ஒரு வடிகால் என்று எண்ணி சிலாகிப்பார்கள். இந்த கடின நெந்சுக்குள்ளே எப்படி இத்தனை கலைப்பிரேமை என்று வியக்கத்தோன்றும். அன்றைய கால கட்டத்தில் அனேகமாக அவரைப் போன்ற திண்ணைப் பள்ளிக்கூட ஆசி¢ரியர்கள் எல்லோருமே இப்படி படிப்பின் நடுவே கோலாட்டம் போன்ற கிராமீயக் கலைகளையும் கற்பித்தே வந்திருக்கிறார்கள்.

ஆவணியில் - அதாவது செப்டம்பர் மாதத்தில் - தசரா விடுமுறை ஏதும் ஐயா விடுவதில்லை. தசராவுக்குப் பதில் இந்தக் கோலாட்டம்தான் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி தரும் காலம். விநாயகர் சதுர்த்தியை ஐயா விமர்சையாகவே பள்ளியில் கொண்டாடு வார். விநாயகர் சதுர்த்தி வருகிறதென்றால், அன்றிலிருந்து ஒரு மாதத்துக்குத் தினமும் சாயங்காலம் பிள்ளைகளுக்குக் குஷிதான். வாய்ப்பாடு, சதகம் ஒப்பிக்கிற பிடுங்கல் இருக்காது. கோலாட்டப் பயிற்சி, அன்று தொடங்கி சரஸ்வதி பூஜை வரை மாலையில் நடக்கும். அப்புறம் விஜயதசமி அன்று
எல்லோருடைய கோலாட்டக் கழிகளையும் கொலுவில் வைத்துப் படைத்து, அன்று முதல் வீடுவீடாய்ப் போய் கோலாட்டம் அடித்து, பிள்ளைகளுக்குப் பொரிகடலை, மிட்டாய், பழம் எல்லாம் தினமும் கிடைக்கும். ஐயாவுக்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒருரூபாய் வீதம் காணிக்கை கிடைக்கும்.

பதினெட்டாம் பெருக்கு, விநாயகர்சதுர்த்தி போன்ற விசேஷங்களுக்கு பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒரு அணாவோ இரண்டணாவோ ஐயா கேட்கிறபடி தர வேண்டும். அந்தப்பணத்தைக் கொண்டு ஐயா பூஜை சாமான்கள் வாங்கிப் படைப்பார். பதினெட் டாம் பெருக்கன்று ஐயா பிள்ளைகளை அருகில் ஓடும் வெள்ளாற்றுக்கு அழைத்துப் போவார். பிள்ளைகள் விநாயகர் அகவலை உரத்துப் பாடியபடி வரிசையாய்ப் போக வேண்டும். அப்போதெல்லாம் வெள்ளாற்றில் வற்றாத நீர் இருக்கும். நீர் ஓட்டத்தை ஒட்டி மணலில் பிள்ளையார் பிடித்து வைத்து காதோலை கருகமணி மஞ்சள்குங்கும் சார்த்தி பொரிகடலை, காப்பரிசி நைவேத்யம் வைத்து ஐயா படைப்பார். பூஜைமுடிந்து, எல்லொருக்கும் நைவேத்யம் வழங்கியதும் பழையபடி விநாயகர் அகவலைப் பாடியபடி பள்ளி திரும்ப வேண்டும்.

விநாயகர் சதுர்த்தியில் பிள்ளைகள் கொடுத்த காசில், ஐயா கொண்டைக் கடலை வாங்கி சுண்டல் செய்து நைவேத்யம் ஆனதும் எல்லோருக்கும் வினியோகிப்பார். பூஜையில் புதிய கோலாட்டக் கழிகளுக்கு மஞ்சள் மசேலென்று மஞ்சள் பூசி அவரவர் கழிகளுக்குத் தனி அடையாளமிட்டு விநாயகருக்கு முன்னே வைத்துப் படைப்பார்கள். பிறகு ஐயாவே தன் கையால் ஒவ்வொருவரது கோலாட்டக்கழிகளையும் அவரவர் அடையாளத்திற்கேற்ப எடுத்து வழங்குவார். உடனே முதல் அப்பியாசம் தொடங்கும். ஐயாவே பாட்டுப் பாடி, ஜால்ரா சப்திக்கத் தொடங்கி வைப்பார். அன்று முதல் தினமும் மாலையில் கோலாட்டப் பயிற்சி தொடங்கும். ஐயா தான் பயிற்சி தருவார். மற்ற ஆசிரியர்களுக்கு இதில் வேலையில்லை.

பலவித கோலாட்டங்கள்- பின்னல் கோலாட்டம், கப்பல் கோலாட்டம் என்று கால்ஜதியுடன் சொல்லித் தருவார். அருட்பா, அருணசலக்கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தன் நாடகக் கீர்த்தனைகள் என்று ஜதிக் கேற்றபடி ஐயா பாட, பிள்ளைகள் உடன் பாடி கோலாட்டக் கழிகளை அடித்து ஆட வேண்டும். கோலாட்டப் பயிற்சியில் தப்பு செய்தால் ஐயாவுக்குப் பயங்கர கோபம் வரும். தாளம் தப்பினாலும் கால்ஜதி மாறினாலும் அவரால் பொறுக்க முடியாது. தப்புச் செய்தவனது கோலாட்டக் கழியையே ஆயுதமாக்கி, ஒரு கழியை அவன் தலைமீது வைத்து மற்றக்கழியால் அதன்மீது அடிப்பார். 'விண்'ணென்று தலை நோவும். சமயத்தில் தன் கையிலிருக்கும் வெண்கல ஜால்ராவால் தப்புவதும் உண்டு. 'ணங் ணங்' கென்று மோதி அதுவும் வலி உயிர் போகும். ஆனால் பிள்ளைகளுக்கு சாதாரண நாளில் கிடைக்கிற தண்டனையை விட கோலாட்டத் தண்டனைப் பயிற்சி பெரிதாகப் படுவதில்லை. தொடர்கிற கோலாட்டமும் பாட்டும் அதை மறக்கச் செய்து விடும்.

தினசரி கோலாட்டப் பயிற்சி முடிந்ததும், 'வாழிப்பாடல்கள்' என்று எல்லோரும் மனப் படம் செய்ய வேண்டும். பிள்ளைகளின் வீடுவீடாகப் போய் கோலாட்டம் அடிக்குமுன் உள்ளூரில் உள்ள எல்லாக் கோயில்களுக்கும் போய் அடிக்க வேண்டும். முடித்ததும் அந்தந்த தெய்வத்துக்கும் என்று உள்ள வாழிப்பாடலைப் பாட வேண்டும். ஐயாவே ஒவ்வொரு கோயிலுக்கும் ஒருவர் என்று குறிப்பிட்டு எழுதிக் கொடுத்து மனப்பாடம் செய்யச் செய்வார். வீடுகளில் அடிக்கும்போது அந்தந்த வீட்டுப் பிள்ளைகள் பாட, பொதுவான வாழிப்பாடல் உண்டு. தினமும் எல்லோரும் சேர்ந்து பாடி, பயிற்சி நடைபெறும்.

விநாயகசதுர்த்தி போலவே சரஸ்வதி பூஜைக்கும் பிள்ளைகளிடம் காசு வசூலித்துப் பூஜை நடைபெறும். சரஸ்வதி படம் கீழிறக்கப்பட்டு அதன்முன்னே பள்ளிக்கூட ரிஜிஸ்தர் கள், மைக்கூடு, பேனா, ரூல்தடி, தேசப்படங்கள் எல்லாம் சந்தனம் தெளிக்கப்பட்டு கொலுவில் வைக்கப்படும். எல்லோருடய கோலாட்டக் கழிகளும் கழுவி மஞ்சள்பூசப்பட்டு கொலுவில் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்படும். மறுநாள் விஜயதசமி அன்றும் பூஜை செய்த பிறகு கொலு பிரிக்கப்பட்டு முதலில் பள்ளிக்குப் பக்கத்திலேயே உள்ள பிள்ளை யார் கோயிலில் கோலாட்டம் தொடங்கும். எல்லாப் பிள்ளைகளும் புதிய வண்ண உடைகளில் அந்த நாட்களில் ஜொலிப்பார்கள். மறுநாளிலிருந்து வேளைக்கு ஒரு
கோயிலாக தினமும் கோலாட்டம் நடைபெறும். சிவன், பெருமாள் கோயிலுடன் மாரியம்மன், செல்லியம்மன், துரௌபதை அம்மன், ஐயனார் என்று எல்லா நத்த தேவதை கோயில்களும் அடித்து முடிக்க நாலு நாளாகும்.

பிறகு ஊர்ப்புரோகிதர் வீட்டில் - அந்த வீட்டுப் பிள்ளைகள் படித்தாலும் சரி, இல்லாவிட்டலும் சரி - முதலில் அடித்து விட்டுத் தான் மற்ற வீடுகளுக்கு, யார் பணம், தின்பண்டத்துடன் தயராக இருக்கிறார்களோ அவர்கள் வீடுகளுக்குப் போய் அடிப்பார்கள். வீட்டின் அந்தஸ்துக்கு ஏற்றபடி, கூடுதலாகவோ, குறைவாகவோ, அதிக அயிட்டங்களுடனோ நிகழ்ச்சிகள் இருக்கும். அதற்கேற்றாற் போல் சன்மானமும் ஐயாவுக்குக் கூடுதலாகக் கிடைக்கும். ஒருவீட்டில் அடித்து முடிந்ததும் அந்த வீட்டுப் பையன் அல்லது பெண் வாழி பாட, நிகழ்ச்சி முடிவுறும். பிறகு அந்த வீட்டுப் பையன் திண்ணையில் தயாராய் வைத்திருக்கிற - பழம், வெற்றிலைப் பாக்குடன் ஒருரூபாய் நாணயமும் கொண்ட தட்டை ஏந்தி வந்து ஐயாவிடம் நீட்டி வணங்குவான். ஐயா முகத்தில் மகிழ்ச்சி விகசிக்க, அவனை வாழ்த்தி ஆசி வழங்குவார். பிறகு எல்லோருக்கும் தின்பண்டம் வழங்கப்படும். தங்கள் வீட்டில் வித்தியாசமாகத் தரவேண்டும் என்பதில் எல்லாப் பிள்ளைகளும் ஆர்வம் காட்டுவார்கள். அதனால் ஒவ்வொரு வீட்டிலும் வேறு வேறு தின்பண்டங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்கும். வீடுகள் குறையக்குறைய ஐயோ முடியப்போகிறதே என்று பிள்ளைகளுக்குக் கிலேசம் உண்டாகும். கடைசி வீடு முடிந்ததும் எல்லோரும் கனத்த இதயத்தோடு பள்ளி திரும்பு வார்கள். மறுநாள் முதல் வழக்கமான சிறை வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமே!

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

No comments: