Thursday, February 10, 2005

களஞ்சியம்-16

எனது களஞ்சியத்திலிருந்து - 16: விவேகசிந்தாமணி விருந்து - 5:

கூடாதவையும் தகாதவையும்:

வாழ்க்கைக்கு ஒவ்வாதவை, கூடாதவை, தகாதவை, துன்பம் தருபவைகளைக் குறிப்பிட்டு அவற்றை விலக்க அறிவுறுத்துகிறது விவேகசிந்தாமணி.

'செய்யக் கூடாதவை' எவை என்று குறிப்பிடும் பாடல்:

தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க! தன் உடம்பின்
ஊன் கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க! - வான் கவிந்த
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க
பொய்யொடு இடைமிடைந்த சொல்!

தக்க சான்றோர்க்கு உதவுதலால் தனக்கு இழப்பு ஏற்பட்டு கெடுதல் நேரும் என்றாலும் அதைத் தவிர்ப்பதால் தனக்கு நன்மை பெற வேண்டி அவர்க்குத் தீமை செய்ய எண்ணுதல் கூடாது. பட்டினி கிடந்து தன் உடல் அழிய நேரினும் கீழ்மைப் பண்புகளை உடைய உண்ணத்தகாதவர் கையிலிருந்து உணவைப் பெற்று உண்ணுதல் கூடாது. வையகமே கிடைக்கும் என்றாலும் பொய்யுடன் கூடிய சொல்லைச் சொல்லு
தல் கூடாது.

சமூகத்தில் பகைக்கக் கூடாதவர் யார் யார் என்று ஒரு பாடல் பட்டியலிடுகிறது.

மன்னவன், கணக்கன், பார்ப்பான்,
வலுவுள்ளோன், மந்திரவாதி,
பொன்னுளவன், குருக்கள்,
புலவன், பண்டிதன், அமைச்சன்,
அன்னம் செய்திடுவோன், எங்கும்
அடங்காத துட்டனாம் இப்
பன்னிரு பேரொடு என்றும்
பகைகன விலும்கூ டாதே.

நாடாளுபவன், ஊர்க் கணக்கன், அந்தணன், உடல் வலிமையுடையவன், மந்திரவாதி, மிக்க செல்வம் உடையவன், ஆசிரியன், புலவன், மருத்துவன், அமைச்சன், சமையல் செய்பவன், எங்கும் அடங்காத பொல்லாதவன், என்கிற இந்தப் பன்னிரெண்டு பேர்களுடன் பகை கொள்வது யாருக்கும் எப்போதும் கனவிலும் ஆகாததாகும்.

மேற்சொன்னவர்களை விரோதித்துக் கொண்டால் என்ன ஆகும் என்பதை நாம் அனைவரும் அறிவ்வோம் தானே? எனினும் எச்சரிக்கிறது விவேக சிந்தாமணி

எதெல்லாம் செய்யாதவன் எப்படிக் கருதப்படுவான் என்றும் ஒரு பாடல் சொல்லுகிறது:

கருதிய நூல் கல்லாதான் மூடன் ஆகும்;
கணக்கறிந்து பேசாதான் கசடன் ஆகும்;
ஒர் தொழிலும் இல்லாதான் முகடி ஆகும்;
ஒன்றுக்கும் உதவாதான் சோம்பன் ஆகும்;
பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலப்
பேசாமல் இருப்பவனே பேயன் ஆகும்.
பரிவுசொலித் தழுவினவன் பசப்பன் ஆகும்;
பசிப்பவர்க்கு இட்டுண்ணான் பாவியாமே.

மதிக்கத் தக்க நல்ல நூல்களைக் கல்லாதவன் மூடன். அளவறிந்து பேசாதவன் குற்றமுடையவன். ஒரு தொழிலையும் செய்யாதிருப்பவன் மூதேவி. ஒரு செயலுக்கும் பயன் படாதவன் சோம்பேறி. அறிவுடையோர் முன்பாக மரம் போல நின்று அவரை வணங்காதிருப்பவன் பேயன்.
உள்ளத்தில் உண்மையான அன்பில்லாமல் ஆனால் அன்புடையவன் போலக் காட்டித் தழுவுபவன் பசப்பல்காரன். பசியுள்ளவருக்குக் கொடுத்து உண்ணாதவன் பாவியாவான்.

( கசடு - குற்றம்; முகடி - மூத்தவள், மூதேவி; )

எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்லுதல் கூடாது. அப்படிச் சொல்வதால் அவற்றின் மதிப்பு கெடும். அவை என்னென்ன என்பதைக் கீழ்க் கண்ட பாடல் சொல்கிறது:

குரு உபதேசம், மாதர்
கூடிய இன்பம், தன்பால்
மருவிய நியாயம், கல்வி,
வயதுறச் செய்த தர்மம்,
அரிய மந்திரம், விசாரம்,
ஆண்மை இங்கு இவைகள் எல்லாம்,
ஒருவரும் தெரிய ஒண்ணாது
உரைத்திடின் அழிந்துபோமே.

ஒருவனுக்கு மறைவாக ஆசிரியர் செய்த உபதேசம், மாதரிடத்து அனுபவித்த இன்பம், தன் மனதில் பொருந்திய நியாயம், தான் கற்ற கல்வி, தன்னால் செய்யப்பட்ட தர்மம், அரியதான மந்திரம், தனது கவலை, தனது வல்லமை என்ற இவையெல்லாம் வேறு ஒருவருக்கும் தெரியச்
சொல்லுதல் கூடாது. சொன்னால் அவற்றின் மதிப்பு அழிந்துபோகும்.

( விசாரம் - கவலை )

இவ்வாறு இன்னும் பல அரிய அற்¢வுரைகளையும் எளிய நடையில் விவேக சிந்தாமணி தருகிறது.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

No comments: