Saturday, March 26, 2005

நினைவுத் தடங்கள் - 31

அப்போதெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை பள்ளி ஆய்வாளர்கள் பள்ளிகளை ஆய்வும் தணிக்கையும் செய்வார்கள். அப்போது பள்ளிகள் குறைவு. அதனால் தவறாது நடக்கும். இப்போது பள்ளிகளின் அதீதப் பெருக்கத்தால் உயர்ந்¢லைப் பள்ளி, மேல் ந்¢லைப் பள்ளிகள் கூட 4,5 ஆண்டுகள் தொடர்ந்து தணிக்கை செய்யப்படுவதில்லை.

ஐயாவின் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாதலால், தணிக்கை தவறாது நடக்கும். ஆய்வும் உடன் சேர்ந்தே நடைபெறும். எல்லாநிலைப் பள்ளிகளிலுமே ஆய்வு என்பது திருவிழா மாதிரிதான். ஒரு வாரம் இருக்கவே பள்ள்¢க்கூடம் அமர்க்களப்படும். ஐயா மற்றவர்களை முடுக்கி விடுவதுடன் தானே அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுவார். பொங்கலுக்கு ஒட்டடை அடித்து, வெள்ளையடித்து வீட்டுக்குப் புதுக்களை உண்டாக்குவது மாதிரி பள்ளிக்கும் புதுமெருகு ஏற்றப்படும். கலர் பேப்பர் வாங்கி சணல்¢ல் ஜண்டா ஒட்டி, பள்ளிக்கு உள்ளும் வெளியும் கட்டப் படும். இதிலெல்லாம்- பாடம் படிக்கும் வேலை இல்லை என்பதால் பிள்ளைகள் வெகு உற்சாகமாய் ஈடுபடுவார்கள். பள்ளிப் பரணில் வைக்கப்
பட்டிருக்கும் தேசப் படங்கள், பிராணிகள் மற்றும் கதைப் படங்களை எல்லாம் அப்போதுதான் பிள்ளைகள் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும்.

கட்டுகளைக் கீழிறக்கித் தூசி தட்டித் துடைத்து, உள் சுவரிலும் வெளிச் சுவரிலும் ஆசிரியர்கள் மாட்டுவார்கள். ஐயா அருமையான, அறிவு பூர்வமான படங்களைச் சேகரித்து வைத்திருந்தார். அவைதாம் எத்தனை வகை! ஒருகட்டு முழுதும் தேசப் படங்கள். சொந்த தாலுக்கா படத்திலிருந்து ஜில்லா, மாகாணம்(அப்போது சென்னை மாகாணம். தென் இந்தியா முழுதும் மொழிவழி பிரிக்கப்படாமல் ஒன்றாக இருந்த
காலம்) இந்தியா, கண்டங்கள், உலகம் என்று எல்லாப் படங்களும் உண்டு. இன்னொரு கட்டில் தாயும் சேயுமாய் வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள், பறவைகள் என்று - அழகான இயற்கைப் பின்னணியில் பார்த்துப் பார்த்து ஐயா சேகரித்து வைத்திருந்தார். கதைப் படங்கள் - இப்போதைய காமிக்ஸ் புத்தங்களில் உள்ள மாதிரி படக் கதைகள்- 'நரியும் காக்கையும்', 'நரியும் திராட்சையும்' போன்ற கதைகளை விளக்கும் படங்கள் ஒரு கட்டு. அப்புறம், கணக்குக் கற்பிக்கும் மணிச் சட்டங்கள், சுழல் அட்டைகள், கன உருவ மாதிரிகள், பூகோள உருண்டைகள் என்று - கொலுவுக்கு வெளியே வரும் பொம்மைகள் மாதிரி வெளிப்படும். கொலு முடிந்ததும் பொம்மைகள் மீண்டும் பரண்
ஏறுவதைப் போல் பள்ளி ஆய்வாளர் வந்து போனதும் இவைகளும் பரண் ஏறிவிடும். அதனால் பிள்ளைகள் கண்காட்சி போல, இப்போதுதான் திகட்டத் திகட்ட அத்தனையையும் கண்ணகலப் பார்ப்பார்கள். அப்புறம் பார்க்க வேண்டுமானால் மேலும் ஒரு வருஷம் காத்திருக்க வேண்டுமே!

ஆய்வுக்கு வருகிறவர்களும் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. 'எப்படி இவையெல்லாம் புதுக் கருக்கழியாமல், சிரஞ்சீவியாய் மார்க்கண்டேயன் மாதிரி இருக்கின்றன? உபயோகப் படுத்துவதே இல்லையோ?' என்று கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு இதெல்லாம் அவர்கள் வரும்போது தென்பட்டால் போதும். உள்ளூரில் வில்வண்டி வைத்திருப்பவரிடம் கேட்டு ஆசிரியர் ஒருவரை உடன் அனுப்பி ஐந்து மைலுக்கு அப்பால் இருக்கும் நகரிலிருந்து இன்ஸ்பெக்டரை அழைத்துவரவெண்டும். அப்போதெல்லாம் எங்கள் ஊருக்குப் பஸ் வரவில்லை. வண்டியில் புதுவெண்ணெய் - நாற்றமில்லாமல் ஐயாவே நேரில் பார்த்து வாங்கியது இரண்டு மூன்று சேர், புதிதாய்ப் பறித்த காய்கறிகள் ஒரு பை - போகும்.

இன்ஸ்பெக்டர் வண்டியை விட்டு இறங்கியதும் உள்ளே நுழையுமுன்பாக நகரிலி-ருந்து வண்டியிலேயே வாங்கி வந்திருக்கிற பூமாலையை வாங்கி, ஐயா வெகு மரியாதையோடு அவருக்கு அணிவிப்பார். முன்பே சொல்லிவைத்தபடி பிள்ளைகள் கனஜோராகக் கைத்தட்டுவார்கள். கடுமையாக இருக்க வேண்டும் என்று வந்தால் கூட இத்தகைய வரவேற்புக்குப் பின்னால் எப்படி இன்ஸ்பெக்டருக்கு சாத்யமாகும்? மனசு குளிர்ந்து புன்முறுவலுடன் உள்ளே நுழைவார். உட்கார்ந்ததும் தயாராய் சீவி வைத்தி ருக்கிற இளநீரை, இரவல் வாங்கி வைத்திருக்கிற வெள்ளித் தம்ளரில் ஊற்றி ஒரு ஆசிரியர் பவ்யமாக ந்£ட்டுவார். மதியம் ஊர்ப் பெரிய மனிதர் வீட்டில் சொல்லி கேரியரில் சாப்பாடு வரும். ஆய்வு நல்லபடி நடந்தேறும்.

உபசாரத்தினால் மட்டுமல்லாமல் ஐயாவின் நேர்மையான பணியை உத்தேசித்தும் இன்ஸ்பெக்டர்கள் ஐயாவிடம் கடுமை காட்டுவதில்லை. பொதுவாக ஐயாவைப் பற்றி அதிகாரிகளுக்கு எப்போதுமே நல்ல அபிப்பிராயம் உண்டு. ஐயா மாதிரி யார் பள்ளிக் கூடமே கதியென்று ஞாயிற்றுக் கிழமைகளில்கூட பிள்ளைகளைக் கட்டி மேய்க்கிறார்கள்? ஐயாவின் 50 ஆண்டு சர்வீசில் ஒரே ஒரு இன்ஸ்பெக்டர்தான் அவரிடம் முரண்டு பண்ணித் தகராறு செய்தவர். அதன் பலனாய் அவமரியாதை அடைந்தும் திரும்பியவர். நாங்கள் படிக்கும்போது அது பற்றிப் பெரியவர்கள் கதை போலச் சொல்லுவார்கள். நாட்டுவக்கீல் என்று காரணப் பெயரால் அழைக்கப் பட்ட ஒருவர் - ஐயாவின் பழைய மாணவர்- எங்களுக்கு முன் தலைமுறைக்கு மூத்தவர், அடிக்கடி ஐயா அந்த இன்ஸ்பெக்டரிடம் சண்டை போட்ட வீரச் செயலைப் பற்றி தனக்கே உரிய ரசமான வருணனையோடு அலுக்காமல் சொல்லுவார். அது இன்னும் என் நினைவில் பசுமையாய் நிழலாடுகிறது.

"சாம்பமூர்த்தின்னு ஒரு இனிஸ்பெட்டர். ஜாதிலே அவுரு அய்யரு. அவுரு நாங்க படிக்கிறப்போ பரிட்சை பண்ண வந்தாரு. அந்தாளு கொஞ்சம் முசுடு. அவுருக்கு நம்ம வாத்தியாரு மேலே என்னாக் கோபமோ தெரியிலே. அந்தாளு கைக்கு வாங்கற வராட்டம் இருக்கு. இவுருதான் அதுலே கரெக்டாச்சே! ஏதோ வெண்ணெய், காய் கறின்னு இவுராப் பிரியப்பட்டுக் குடுத்தாத்தான். காசு வாங்கி ருசி கண்டவனுக்கு காய்கறியும் வெண்ணையும் எப்பிடிப் போதும்? சாடைமாடையாக் கேட்டும் இவுரு கண்டுக்கலை போல்ருக்கு. அந்தக் கோபம்
இனிஸ்பெட்டருக்கு. வரும்போதே ஒரண்டு கட்டிக்கிட்டு வந்தாரு. முன்கூட்டியே சொல்லிவச்சு வண்டி போய் அழச்சாறதுதான் வழக்கம். ஆனா இவுரு வாத்தியாருக்குச் சொல்லாமெக் கொள்ளாமே திடீருண்ணு குதுர வண்டியிலே வந்து எறங்குனாரு. அப்ப ஐயா மட்டும்தான் வாத்தியாரு. அவுருக்கு என்ன பண்றதுன்னே புரியலே. "வாங்க வாங்க! சொல்லியிருந்தா வண்டி அனுப்பிச்சிருப்பனே" ண்ணு பணிவாத்தான் சொன்னாரு. "ஏன் உம்மக் கிட்டே சொல்லிட்டுத் தான் வரணுமோ?" - அப்படீண்ணு முறைச்சாரு இனிஸ்பெட்டரு. "திடீருண்னு வந்தாத்தான் உம்ம வண்டவாளமெல்லாம் தெரியும்"ணு வேறே சொன்னாரு. சீண்டி விட்ட நல்ல பாம்பு மாதிரி வாத்தியாருக்கு 'புர்ரு'ண்ணு கோபம் வந்துடிச்சி. 'ஆஹா! பேஷாப் பாருமேன்! என் வண்டவாளத்த நீரு எடுத்துக் காட்டாமேப் போனீரு- அப்பறம் தெரியும் சேதி" ண்ணு ஒரு சீறு சீறுனாரு.

இனிஸ்பெட்டரு விடுவிடுண்ணு உள்ள போயி தானே நாக்காலிலே உக்காந்தாரு. அப்புறம் அரை நாழி 'தீவாளி'க் கேப்பு வெடிக்கிற மாதிரி 'சடபுடா'ன்னிட்டு அந்த ரிஜிஸ்டரக் கொண்டா, இந்த நோட்டக் கொண்டாண்ணு அதிகாரம் பண்ணி ஆர்ப் பாட்டம் பண்ணுனாரு. வாத்தியாரும் அப்பப்போ பதிலுக்கு எதிர்வாணம் மாதிரிச் சீறிக் கிட்டு அவுரு கேட்டத எல்லாம் எடுத்துக் காமிச்சாரு. பசங்களையும் வாய்ப்பாடு, மனக்கணக்கு, டிக்டேஷண்ணு பெரட்டி எடுத்தாரு. ஒண்ணுலியாவுது குத்தம் கண்டு புடிக்கணுமே! ஊகூம், நடக்குலே! எல்ல கஜகர்ணமும் போட்டுப் பாத்துட்டு, 'விசிட்' புஸ்தகத்த வாங்கி என்னுமோ விறுவிறுண்ணு கிறுக்குனாரு. வாத்தியாரு பேசாமப் பாத்துக் கிட்டே இருந்தாரு.
விசிட் புஸ்கத்தை எழுதி முடிச்சி மேசமேலே விட்டெ றிஞ்சாரு. வாத்தியாரு அத எடுத்துப் படிச்சுப் பாத்தாரு. படிக்கப் படிக்க மூஞ்சி பயங்கரமா செவசெவத்து உக்கிரமாயிடுச்சு! 'சர்'னு நோட்ட ரெண்டாக் கிழிச்சி இனிஸ்பெட்டரு தலமேல வச்சு, 'படக்'குண்ணு அவரோட பூணூல இழுத்துக் கையில புடிச்சிக்கிட்டு, "ஓய் சாம்பமுர்த்தி அய்யிரே! நெசந்தான் - இந்தப் பள்ளிக்கூடத்துல சுகாதார வசதியில்லே, கட்டடமில்ல, மரத்தடியிலதான் நடக்குது - அது இதுண்ணு 'கிராண்ட' வெட்டறதுக்குத் தோதா எழுதிப்புட்டீரு - சரி! - ஆனா அம்மாம் சத்திய வந்தரான உம்ம ஒண்ணு கேக்கிறேன் - உம்மப் பூணுலு மேலெ சத்தியமாச் சொல்லும்! இண்ணைக்குத் தேதி என்னா? முந்தா நாளுத் தேதிய போட்டுருக்கியே- அண்ணிக்குத் தான் இந்த 'ஸ்கூலை" விசிட் பண்ணியா நீ? உனக்குப் 'படி' கெடைக்குறத்துக்காக
அப்பிடி எழுதலேண்ணு சத்தியம் பண்ணு!" ண்ணு வாத்தியார் ஆங்காரமாக் கத்தவும் பயந்து பூட்டாரு இனிஸ்பெட்டரு. இரணியனக் கொடலப் புடுங்கி மாலையாப் போட்டுக்கிட்ட நரசிம்ம மூர்த்தி மாதிரி இருக்கு வாத்தியாரப் பாத்தா. அவுரு அலண்டு போயி எந்திருச்சி, 'சரி சரி! என்னே விடும்' ணு வெளியே பாய்ஞ்சி குதுர வண்டியிலே தாவி ஏறிப் பறந்துட்டாரு! பாவம், ஒரு வாய் காப்பிகூடக் கெடைக்கல அந்த மனுஷனுக்கு. எல்லாம் இருக்கிறபடி இருந்தால்ல? தம்பேர்லத் தப்பு இல்லேண்ணா, வாத்தியாரு லேசுலே உட்றமாட்டாரே!" என்று நாடகம் மாதிரி, அப்படியே நடிச்சுக் காட்டினார் நாட்டு வக்கீல் ஒரு தடவை எங்களுக்கு.

நேர்மையற்ற அதிகாரிகளுக்கு ஐயாவிடம் பயந்தான். நல்ல அதிகாரிகள் வந்து பார்த்து விசிட் புத்தகத்தில் ஐயாபற்றியும் அவரது போதனை பற்றியும் பாராட்டியே எழுதிப் போவார்கள். மக்களும் பிள்ளைகளும் அவரிடம் மதிப்பும் மரியாதையுமே கொண்டிருந்தார்கள். இப்படி மூன்று தலைமுறைகளுக்குக் கல்வி கற்பித்த அவர் கடைசி நாட்களில் நலிவடைந்து நாதியற்று பக்கத்து நகரில் பசியால் மயங்கி விழுந்து மரணமடைந்தது பெரும் சோகம். ஊருக்குப் பஞ்சாயத்து வந்தபோது அவர் இருந்த பொதுச் சாவடியைப் புதுப்பித்து அலுவலகம் ஆக்கினார்கள். அந்தக் கட்டடத்துக்கு ஐயாவின் நினைவாக அவர் பெயரை இட நானும் என் சகோதரர்களும் எவ்வளவோ முயன்றோம். ஆனால்
அவரது அருமையை அறியாத அடுத்த தலைமுறை அதை உதாசீனப் படுத்திவிட்டது. அது வெகு நாட்களாக என் மனதை உறுத்திக் கொண்டி ருந்தது. பிறகு 20 ஆண்டுகள் கழித்து, அவருக்கு நினைவுச் சின்னம் போல அவரது வாழ்வை மையப்படுத்தி என் முதல் நாவலை எழுதி அவருக்கு அர்ப்பணித்தேன். என் முதல் கதையின் நாயகனான அவரே என் முதல் நாவலின் நாயகனாகவும் அமைந்ததும் அந்த நாவல் கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 1994ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான 10000 ரூ. பரிசு பெற்றதும் நான் எதிர்பாராதது. எனக்கு எண்ணையும் எழுத்தையும் கசடறக் கற்பித்ததோடு என்னை எழுத்தாளனாக அங்கீகாரம் பெறவும் செய்த ஐயா என்றும் என் நினைவில் நிற்பவர்.

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

No comments: