Tuesday, May 31, 2005

நினைவுத் தடங்கள் - 32

எனது குண இயல்புகளையும், இலக்கிய ஈடுபாட்டையும், நிர்வாகத்திறன்களையும் உருவாக்கியதில் எங்கள் ஆசான் 'ஐயா'வின் பங்குக்கு ஈடானது என் தந்தையாரின் பங்கும். அவருடைய கல்வி எங்களை உருவாக்கப் பெரிதும் காரணமாக இருந்தது. அவர்கள் அந்தக் காலத்து (1914) மெட்ரிகுலேஷன். அவருக்கு முன்னால் எங்கள் வம்சாவளியில், அதிகம் படித்தவர்கள் யாரும் இல்லை. எங்கள் வட்டாரத்தில் கூட இல்லை. அதனால் அவருக்கு நிறைய மக்களிடம் மரியாதை இருந்தது. அந்த வட்டாரத்தில் யாருக்காவது தந்தி வந்தாலும் நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்தாலும் அவற்றைத் தமிழில் படித்துச் சொல்ல எங்கள் தந்தையைத்தான் தேடி வந்தார்கள். அதோடு எங்கள் ஊரில் எங்கள் வீட்டில் மட்டுமே மணியடிக்கும் சுவர்க் கடிகாரம் இருந்தது. 1932ல் எங்கள் தந்தையாரால் வாங்கப்பட்ட அந்தக் கடிகாரம் அவர் காலமான பிறகும்கூட 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தது. யார் வீட்டிலாவது பிரசவம் என்றால் குழந்தை பிறந்த நேரம் அறிய எங்கள் வீட்டுக்குத்தான் மணி கேட்டு ஆள் வரும். மணியையும் பார்த்து எங்கள் அப்பாதான் சொல்ல வேண்டும். அவர்கள் ஊரில் இல்லாத போது சொல்ல வேண்டும் என்பதற்காக அப்பா எங்கள் வீட்டு மூத்த பிள்ளைகளுக்கும், அண்டை அயல் பிள்ளைகளுக்கும் மணி பார்ப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்திருந்தார்கள். இதிலொரு வேடிக்கை என்னவென்றால் மணி பார்க்க வருபவர்கள் பிள்ளை பிறந்ததும் அவர்கள் வீட்டிலிருந்து வந்து பார்ப்பதற்குள் ஆகியுள்ள நேரமும் கணக்கில் சேர்ந்துவிடும். அதன் அடிப்படையில் எழுதப்படும் ஜாதகங்கள் எந்த அளவுக்கு முழுமையான பலன்களைச் சொன்னதோ தெரியவில்லை.

படிக்கும் காலத்திலேயே தந்தையார் சுவாமி வேதாச்சலம் - மறைமலை அடிகள், திரு.வி.க, கடலூர் ஞானியாரடிகள் ஆகியவர்களின் தமிழுணர்வால் ஈர்க்கப்பட்டு தமிழு ணர்வும் சைவமத ஈடுபாடும் கொண்டவர்களாக இருந்தார்கள். அதனால் சைவ சித்தாந்த நூல்களையும் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் ஆகியவற்றையும் தானே முயன்று படித்துத் தேர்ந்தார்கள். அதன் காரணமாய் சிவதீட்சையும் பெற்று தினமும் சிவபூஜை செய்த பின்பே சாப்பிடும் வழக்கத்தையும் இறுதிவரை கொண்டிருந்தார்கள்.

அவர்கள் இளைஞராக இருந்தபோது செல்வாக்காக இருந்த ஜஸ்டிஸ் கட்சியால் ஈர்க்கப்பட்டு தனது திருமணத்தை அய்யர் இல்லாத தமிழ்த் திருமணமாக - ஓதுவாரைக் கொண்டு தமிழில் மந்திரங்களைச் சொல்லச்செய்து, பலரது எதிர்ப்பையும் மீறி செய்து கொண்டார்கள். இருபதுகளில் அது பெரிய புரட்சியாகக் கருதப் பட்டிருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஓராண்டில் தலைப்பிரசவத்தில் மனைவி இறந்துவிட அய்யர் வைக்காமல் திருமணம் செய்ததால்தான் அப்படி நேர்ந்தது என்று எல்லோரும் பேசினார்கள். அதனால் அடுத்த
திருமணத்துக்கு அய்யர் வைத்தால்தான் பெண் தரமுடியும் என்று மறுப்புக் கிளம்பவே எங்கள் தந்தையார் தன் பகுத்தறிவுக் கொள்கையைப் பலி கொடுக்க வேண்டியதாயிற்று. அதன்படி அய்யர் வைத்த திருமணமாய் எங்கள் தாயாரை மணந்தார்கள்.

தான் படித்திருந்ததால், தன் பிள்ளைகளான எங்கள் ஐவரையும் உயர்படிப்பு படிக்க வைத்ததும் உயர் அரசுப்பணிகளில் ஈடுபடுத்தியதும் அந்தக் காலகட்டத்தில் புதுமையாக வியந்து பேசப்பட்டது. உண்மையில் அந்த வட்டாரத்தில் நாங்கள்தான் முதல் பட்ட தாரிக் குடும்பமும் ஆகும். சின்ன வயதிலிருந்தே எங்களுக்குப் புராணக் கதைகளைச் சொல்லி இறையுணர்வும் அறவுணர்வும் கொண்டவர்களாக வளர்த்தார்கள். அவர்கள் காலப்பிரக்ஞை மிக்கவர்கள். எதையும் நேரம் தவறாது செய்ததுடன் எங்களையும் அப்படியே பழக்கியதால் எங்கள் பணியில் சிறப்பாகப் பெயர் பெற அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அது மட்டுமல்லாமல் நாணயம் தவறாத வாழ்க்கை அவர்களுடையது. எங்களையும் அந்த நெறியுடனே வளர்த்ததால் நாங்கள் எங்கள் பணிக்காலத்தில், கையூட்டுக்கு ஆசைப் படாத நாணயம் மிக்கவர்களாக வெற்றிகரமாக ஓய்வுபெற முடிந்தது. அதனால் இன்றும் ஊருக்குச் சென்றால் தந்தையாருக்குக் கிடைத்த அதே மரியாதை மக்களிடம் எங்களுக்கும் கிடைக்கிறது.

எங்களைப் படிக்க வைத்தது மட்டுமல்லாமல் எங்கள் ஊரில் மற்ற பிள்ளை களையும் உயர் படிப்புக்கு அனுப்பத் தூண்டினார்கள். இருந்தும் பொருள் வசதியில்லா ததால் யாரும் அப்போது எங்களைப் பின் பற்ற முடியவில்லை. அப்போது இப்போது போல ஊருக்கு ஊர் அஞ்சல் ந்¢லையம் இல்லை. எங்கள் ஊருக்கு, பத்து கல் தொலைவில் உள்ள திருமுட்டம் என்கிற ஊரிலிருந்துதான் வாரம் இருமுறை அஞ்சல்கள் வரும். எங்கள் அப்பா தினமணியும், ஜஸ்டிஸ் கட்சிப் பத்திரிகை ஒன்றும் சந்தாக் கட்டி வரவழைத்தார்கள். மூன்றுநாள் பேப்பர் சேந்து வரும். அண்டை அயலில் உள்ளவர்களையும் வழியோடு போகிறவர்களையும் கூட்டிவைத்துக் கொண்டு அப்பா தினமணியைப் படித்துச் சொல்வார்கள். அப்போது இரண்டாம் உலகப்போர் (1936-45)நடந்து கொண்டிருந்த நேரம். போர்ச் செய்திக¨ளையும் நாட்டுநடப்புகளையும் ஒரு கடமை உணர்வுடன் அப்பா படித்துச் சொல்வதை எங்கள் தெரு நடையில் அமர்ந்து ஒர் கூட்டம் ஆர்வமாய்க் கேட்கும்.

நிலம் நிறைய இருந்தும் அதைப் பின்னாளில் பார்த்துக் கொள்ள யாருமில்லாத படி பிள்ளைகள் எல்லோரையும் படித்து உத்தியோகத்துக்கு அனுப்பிவிட்டால் நிலத்தை யார் பார்ப்பார்கள் என்று சிலர் கேட்பார்கள். அதற்கு அப்பா ருஷ்யாவிலும் சீனாவிலும் நடைபெற்று வந்த பொதுவுடைமைப் புரட்சிகளை எடுத்துச் சொல்லி, 'இன்னும் இருபது முப்பது ஆண்டுகளில் இந்தியாவிலும் கம்யூனிசம் ஆட்சிக்கு வந்து விடும். அப்போது நிலம் உழுகிறவனுக்கே சொந்தமாகிவிடும். அப்போது என் பிள்ளைகள் ஏரோட்டவேண்டி வரும். அதனால்தான் படிக்க வைக்கிறேன். எல்லோரும் உங்கள் பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டியது அவசியம்' என்று சொல்வார்கள். இப்படி எங்களுக்கு மட்டுமல்லாமல் எங்கள் ஊருக்கே வழிகாட்டியாக இருந்தார்கள்.

அப்போதெல்லாம் கிராமப் பஞ்சாயத்துகள் ஏற்பட்டிருக்கவில்லை. 'உஷார் கமிட்டி' என்ற ஒரு அமைப்பு இருந்தது. ஊர்ப் பெரிய மனிதர் ஒருவர்தான் அதன் தலைவராக இருப்பார். வழக்கு, நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் அவரது தீர்ப்புதான் முடிவு. அப்போது எங்கள் பெரியப்பாதான் தலைவர். அவர் எங்கள் அப்பாவைப்போல் மக்களிடையில் மதிப்புக்குரியவராக இருக்கவில்லை. ஏனெனில் அவர் எல்லாவகையிலும் எங்கள் அப்பாவிடமிருந்து மாறுபட்டவர்.

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

No comments: