Thursday, June 16, 2005

உவமைகள் வர்ணனைகள்- 41

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 41

ஆர்.சூடாமணியின் படைப்புகளிலிருந்து:

1. வானத்தில் இரவின் கதவுகள் திறக்க ஆரம்பித்து உள்ளிருக்கும் நட்சத்திரங்கள் மெல்ல மெல்ல காட்சிக்கு வரலாயின. பிறகு நல்ல இருட்டில் விண்ணிலும், மண்ணிலும் விளக்குக் கற்றைகள் பளிச்சென்று பூத்தெழுந்தன.

- 'அரிசி விலையில் திருமணங்கள்' கதையில்.

2. வருஷங்கள் செல்கின்றன என்றால் இன்பங்கள் செல்கின்றன என்றுதானே அர்த்தமாகிறது? அன்பானவர்கள் மறைகிறார்கள். அழகானவை சிதைகின்றன. கடந்து போகும் ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு துன்பத்தை, ஒவ்வொரு நிராசையை, ஒவ்வொரு நாசத்தை மனதில் பொருத்திவிட்டுச் செல்கிறது. வருஷங்களூடே நினைவுச்சுமை அதிகரிக்கிறது. நினைவு எல்லாம் கானல் நீர். ஆறுதலுக்காக அதை அணுகினால், துன்பமாகக் காட்சி அளிக்கிறது. போய்விட்ட இன்பங்களால் வறண்ட உள்ளத்தை வாட்டுவதுதான் நினைவு.

- 'ஒன்றே வாழ்வு'.

3. அப் பெண் மாநிறம். விசிறி போன்ற விரிந்த ரப்பை மயிரின் பின்னால் இரு கருவிழிகள். எண்ணெய் அறியாத வறண்ட கூந்தல்.அதிக உயரமோ சதையோ இல்லாத மென்மையான இளம் தேகம். வயதிற்குரிய ஒரு இயற்கையான பொலிவு. ஆனால் நீளமும், அகலமும் அற்ற அச் சிறு வடிவம் ஆழத்தினால் ஆக்கப்பட்டது போன்ற பிரமையை உண்டாக்கியது.

- 'பாசமும் பயனும்'.

4. தன்னைச் சுற்றித் தெறித்த முரணின் பொறிகளிலிருந்து நீலாவுக்கு, இந்த நெருப்பு எப்படி இத்தனை வருஷங்களான பின்னும் ஆறவில்லை என்று வியப்பாக இருந்தது. கிழவர்களின் அமைதியான பரஸ்பர அலட்சியத்தைப் பார்த்து, ஆழமான அன்பைப் போலவே ஆழமான வெறுப்பும் நிலையானதுதான் என்று அவளுக்குத் தோன்றியது.

- 'சந்திப்பு'.

5. ஒரு கணம் முகுந்தன் அவள் முகத்தை மனதில் பதித்துக் கொள்பவன் போல் மௌனமாய் உற்று நோக்கினான். பார்வையும் குரலும் பூக்களாய் அவன் மேல் உதிர்ந்தன.

- 'அடிக்கடி வருகிறான்'.

6. அவள் அழகியா இல்லையா? எனக்குச் சொல்லத் தெரியவில்லை. பார்ப்பவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்த அழகு அது. ஒவ்வொருவரும் தம்தம் மனோபாவத்துக் கேற்ப அர்த்தமிட்டுக் கொள்ளத் தக்க பலமுகக் கவிதை போன்ற அழகு.

- 'நான்காம் ஆசிரமம்'.

7. காட்டராக்ட் கண்ணாடிக்குப் பின்னேயும் குளிர்ச்சி மாறாத பார்வை. சாப்பாட்டு நேரம் போக மற்ற சமயங்களில் பொய்ப் பற்களைக் கழற்றி வைத்து விட்டுப் பொக்கை வாயோடு சிரிக்கும் சிரிப்பு. இன்னும் அடர்த்தி குன்றாத நரை முடியில் சாம்பல் 'பிரமிட்'. மாநிற....... - வர்ணிப்பானேன்? இவற்றிலா மாமா அறியப்படுகிறார்? இவை மாமாவுடையவையாதலால் இவை அழகுடையவை; பொருடையவை.

- 'ரோஜா பதியன்'.

8. அன்பு மகா பயங்கரமான ஒரு நெருப்புக்குச்சி. அது இரண்டு ஆத்மாக்களைக் கொளுத்தி உருக்கி ஒன்றாக இணைத்து வார்த்து விடும்.

- 'அத்தை'.

9. வண்டி ஓட்டத்தினால் உள்ளே வீசிய காற்றையும் மீறி அவர் முகத்தில் வேர்வை மின்னியது. ஒவ்வொரு வேர்வைத் துளியும் 'பெண்ணின் தந்தை' என்று பறை சாற்றுவது போல இருந்தது.

- 'புவனாவும் வியாழக் கிரகமும்'.

10. ஈட்டிகளாய்ப் பார்வைகள் அவளைத் துளை செய்தன. பெண் பார்வைகள், ஆண் பார்வைகள்- அவளைப் பார்த்த யாவருமே, அவளது முகத்தைத்தான் பார்த்தார்கள் என்று சொல்லி விட முடியாது. கண்ணாலேயே கற்பழிக்கும் கிழங்கள்.

- 'பன்மை'.

- மேலும் வரும்.

- அடுத்து பாலகுமாரன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

No comments: