Wednesday, December 13, 2006

உவமைகள் வர்ணனைகள் - 47

நான் ரசித்த உவமைகள் வருணனைகள் - 47

க.சீ.சிவகுமார் படைப்புகளிலிருந்து:

1. வானில் கண்ணுக்குத் தெரியாத ஆலை இருப்பது போலச் சத்தம். உண்மையில் காற்று பொருட்களால் கிழிபடும் ஓசை அது. ஆடிக் காற்று ஆனியிலேயே தொடங்கி விட்டது. காற்று இல்லாதபோது பங்குனி போலக் கொளுத்தியது வெயில். பாளம் பாளமாய் வெட்டி உருவலாம் போலத் தெளிவான வெயில். நிமிடத்தில் வியர்வைச் சுரப்பிகள் கனன்றன. இன்றைக்கு மழை வருமா என்று யோசித்தான்.

- 'மேகங்கள் தீர்ப்பதில்லை' கதையில்.

2. ஊரின் மேலாக உலவித் திரியும் மேகங்கள் இரக்கமற்றவை.மேகம் பார்த்த பூமியின் பரிதவிப்பைப் பழித்துக் காட்டிய வண்ணம் ரூபம்மாறித் திரிபவை. வீட்டு நிலைகளைப் பெயர்த்தும், ஓடுகளைப் பிரித்தும் விற்றுவிட்டு பாத்திர பண்டத்தோடு வண்டியேற 'பெய்யா மழை' காரணமாய் இருந்தது.

- 'அண்டமா நதிக்கரையின் ஊரில் ஒரு வீடு'.

3. ஆறு. ஓடுகிறபோது நீரழகு. ஓடாதபோது மணலழகு. சிறு பெரு கற்கள் அழகு. கரைமரம் அழகு. மேவி ஓடிய நீர்க்காலத்தில் எய்திய வழவழப்புப் பாறை அழகு. சண்முகசித்தாறு ஒரு காட்டாறு. எப்போதாவதுதான் அது கரைமீறிப் பிரவகித்து ஓடுகிறது. பிறகெல்லாம் காய்ந்தே கிடக்க்¢றது.

- 'சண்முகசித்தாறு'.

4. சில சமயம் காலக்குயவன் விவஸ்தையற்றுத் தவறு புரிகிறான்.எனக்கு ஒரு வருஷம் முந்தி அவளை வனைந்து விட்டான். பள்ளியின் நான் பத்தில் படிக்கையில் அவள் பதினொன்றில் வந்து சேர்ந்தாள். புல்நுனித் திவலை போல. புல்லாங்குழலைப்போல. மண்துகள்களைப் பொன்னாய் மாற்ற மணல் ஆரண்யத்தின் மையத்தில் பூத்த மாயமலர் போல.

- 'வெளிச்ச நர்த்தனம்'.

5. காலத்தினதும் அனுபவத்தினதுமான ஒரு நான்கு வருடத்திய முட்கள் முகத்தில் கீறுவத்ற்கு முன்பு. தென்னைகளும், வழிந்தோடும் 'புழ'களும், அரபிக் கடலின் அருகாமையுமாக ஜீவிதமே மரகதப் பசுமையாய் திகைந்து விட்டதான தோற்றம்.

- 'காற்றாடை'.

6. அநாதரவின் பாலொளி எங்கும் வீசுகிறது. நிலவின் நீண்ட இறக்கை வெளிச்சம் புவிமேவிக் கவிந்திருப்பது ஊதாத்திட்டுகளுடன் எனது ஓட்டைக் கூரை வழியே காட்சிக்குக் கிடைக்கிறது. வேர் தேடி அலையும் மேகங்களின் கீழாக விருப்பங்கள் பெருக்கெடுத்து ஓடுகின்றன.பூக்களின் தொடுநாராகி என் கைகள் மாலையாகின்றன இக்கணம். தனியே கழற்றி உதறி எங்கேனும் சுயம்வரச் சங்குக்கழுத்தில் போட்டு விடலாம் என்று தீர்மானிக்கிற நேரம் கைகளற்று உதறுவது எங்கனம் என்ற கேள்வியும் எழுகிறது.

- 'நிணநீர்ச் சுவடி'.

7. நிலவின் இணுக்கோ உயித்துள்ளலில் பன்மடங்கு வசீகர வியாபகம் பெற்றவாறிருந்தது. கூந்தல் கோதிப் போயின பறவைகள். அண்டமாநதியில் அவள் நீர் முகக்கப் போகையில் துவரையளவு வாய் திறந்து சிறுமீன்கள் பேசின. 'பாவம்! இவள் - நிரந்தரத்தின் பேரழகி... நித்யயௌவனி. 'நிலவாழிகள் அறியாததை நீர்வாழிகள் அறியும்.

- 'தீண்டாநாயகி'.

8. ஊரின்மீது முதலில் படிந்தது இரவே எனும்படி பனைகள் சூழ்ந்த ஊரில் அநேக காலம் பனைத்தண்டி பொதிந்திருந்து உயிர் பெற்றுப் பறந்தவையென காகங்கள் நிறைந்தன.அவற்றின் நிழல்களுக்கோவெனில் கால்படத் தேவையில்லை நிலத்தில். பகலின் தரைவெளுப்பில் படகுபோலச் சரிந்தோடும் அவற்றின் நிழல்கள். இரவுக்கே மரமுரையும்
காகம். முகம் ஓயும் வரை பகலிற் பறந்து இரைகாணும் அவற்றின் நிழல்படியும் சாலையிலும் தெருக்களிலும்.

- 'கன்னிவாடி'.

9. விளக்குகளை ஏற்ற முற்பட்டபோது காற்றின் வேகத்தில் அணைந்து விட்டன. பாவத்தை வாயுபகவான் மீது போட்டுவிட, விளக்குகள் சுடரின்றி ஒதுங்கின ஓரமாய்.

- 'நாற்று'.

10. மரத்தின் கீழ்க்கிளையொன்றில் தேன்கூடு அப்பியிருந்தது - ஓரத்தை தட்டி எறிந்த தோசைக் கல்லைப் போல. சலனமற்று தேனீக்களின் இயக்கமும் சிறகடிப்பும் இல்லாமல்
உண்ணிகளைப்போல ஒட்டியிருந்ததில் பளபளப்பும் காணாமலாகி இருந்தது.

- 'வான்சிறப்பு'.

- வே.சபாநாயகம்.

No comments: