Tuesday, November 20, 2007

உவமைகள் - வருணனைகள் - 50 (பாக்கியம் ராமசாமி)

'பாக்கியம் ராமசாமி'(ஜ.ரா.சுந்தரேசன்) படைப்புகளிலிருந்து.


1. அப்புசாமி தண்ணீர் அதிகமாகிவிட்ட உப்புமா மாதிரி தளரத் தளர நடந்து வருவதைப் பார்த்ததுமே அவனுக்குத் 'திக்'கென்றது.

- 'அப்புசாமியின்பொன்னாடை'கட்டுரையிலிருந்து.

2. அப்புறம் சற்றுக் கீழே தள்ளி மூன்று வரிகள் - கடற்கன்னி எனப்படும் 'மெர்மெய்ட்' மாதிரி பாதி இந்தி, பாதி இங்கிலீஷ் உருவில் படுத்திருந்தது.

-'இன்லண்ட் லெட்டரில் இடைஞ்சல்கள்'.

3. போட்டி தினம். சூரியன் வழக்கம் போலச் சரியாக கிழக்கே உதித்துவிட்டு, தப்பான பிளாட்பாரத்துக்கு வந்துவிட்ட ரயில் மாதிரி 'திருதிரு' வென்று விழித்தது. 'நாம் ஒருகால் லேட்டாக உதித்துத் தொலைத்துவிட்டமோ? வழக்கமாக நாம் உதிக்கும்போது அப்புசாமி கட்டிலில் துப்பட்டிக்குள் அல்லவா இருப்பார்? இன்றைக்குக் குளித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட,கண்ணைமூடி ஏதோ சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறாரே'.

- 'அலங்காநல்லூர் அப்புசாமி'.

4. மாமியார் 'கொள்கொள்' ளென்று இருமினால் கூட சில வார்த்தைகள் புகழ்ந்து வைக்கலாம். அவர் காதில் படுகிறமாதிரி ''எங்க மாமியார் இருமினாங்கன்னா வெண்கல மணியாட்டம் பிசிறில்லாம இருக்கும். இருமல்னா 'ப்யூர்' இருமல். இழுப்பு, வீசிங் அதெல்லாம் இருக்காது. கோவிலில் சாயங்கால பூஜையிலே அடிக்கிற மணியோட நாதம் தான் எனக்கு ஞாபகம் வ்ருது. அது என்னவோ ஆச்சரியம் பாருங்கள் - ஒரு ரெண்டு மாசம் இருமுவார். அடுத்த ஒரு மாசம் இரும மாட்டார். மறுபடி ஒரு ரெண்டு மாசம் இருமுவார். அப்புறம் பதினைந்து நாள் இரும மாட்டார். எல்லோராலும் இப்படி இருமிவிட முடியாது.

மாமியாருக்கு இருமல் நின்று போய்விட்டால் கூடக் கஷ்டப்பட்டு இருமிக் கொண்டிருப்பார். - மருமகளின் சர்டிபிகேட்களால்.

- 'புகழும் கலை'.

5. எங்கள் அடுக்கக வாட்ச்மேன் டியூட்டி என்று எதையும் குறிப்பாகப் பார்த்ததாகக் கூற முடியாது. 'உளன் எனில் உளன்; இலன் எனில் இலன்' என்று பக்தர்கள் கடவுளைக் குறிப்பிடுவதைப் போல எங்கள் வாட்ச்மேன் இருக்கிறார் என்றால் இருக்கிறார்; இல்லை என்றால் இல்லை!

- 'வாங்கய்யா வாட்ச்மேனய்யா'.

6. ஒரு பழைய புஸ்தகத்தின்மீது வாகாக ஒரு கொசு உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ''நன்றாகக் கவனி'' என்று நான் சொல்லிவிட்டு அந்தக் கொசுவைத் தொந்தரவு செய்யாமல், உஷாராக 'பேட்'டை மெதுவாக மெதுவாக...(ஆசன ஆண்டியப்பன் யோகா செய்யும் குழந்தைகளுக்குச் சொல்வது போல) மெதுவாக கொசுவுக்கு ஒரு சாண் உயரத்தில் குடைபொலப் பிடித்துக் கொண்டேன்.

- 'புது முறையில் கொசுவைக் கொலை செய்வது எப்படி?'.

7. உன் மச்சினன் எப்பவும் ரொம்பக் கோபக்காரன். மச்சினன் (muchசினன்) என்ன மூடுல இருந்தானோ? ஆபீசுலே ஸஸ்பென் ஷன்லே இருக்கானோ? அல்லது அவனுக்குக் கீழிருந்தவனுக்கு 'ஃபர்பாமென்ஸ்' இன்கிரிமெண்ட்' சேத்துக் குடுத்துட்டானோ?

- 'சம்பளம் ஒரு வம்பளம்'.

8. பழுப்புக்கவர்லே, ஏதாவது கவர் - நீலக்கலர் அதி விசேஷம் - வந்தால் என் மனசிலே ஒரு கிளுகிளுப்பு ஏற்படுவது வழக்கம். டிவி யிலிருந்து வானொலியிலிருந்து ஏதாவது சன்மானம் அல்லது லைப்ரரிகள் எதிலிருந்தாவது 'செக்', இந்த மாதிரியான விஷய மாக இருக்கும். (வெகு அபூர்வமாக வரும் என்றாலும்) பழுப்புக்கவர் வந்தாலே, மனசிலே ஒரு பழைய காதலி, காதலனைப் பார்ப்பது போன்ற ஒரு இன்பப் படபடப்பு ஏற்படுவது வழக்கம். அப்படி ஒரு கவர் போனவாரம் வந்து சேர்ந்தது.

- 'நீ செத்தாயா பிழைச்சாயா?'.

9. "ஐயோ பொறி கொள்ளாடா? இந்தப் பாழாய்ப்போன பட்டணத்திலே எந்தப் பலகாரக் கடையிலேயும் பொறிகொள்ளுங்கிற அயிட்டம் கிடைக்காதேடா! அதிசயம்டா! அது ஒரு அபூர்வம்டா! இங்கே பாம்பே மிக்ஸர்னும், நவதானிய மிக்ஸர்னும் எண்ணெயிலே போட்டுப் பொறிச்சுத் தர்ரதெல்லாம் பொறிகொள்ளாடா? உங்கப்பாட்டி பண்ணிக் கொண்டு வருவாளே, நடுநடுவே பல்லு பல்லாக் கொப்பரைத் தேங்காய் - ஒரு தரம் அவள் பல்லே கூட இருந்தது -மஞ்ச மசக்க மஞ்சள் தேச்சுக் குளிச்சுட்டு சுமார் ஈரமாக வந்தசுமங்கிலி மாதிரி அந்தப் பொறிகொள்ளோட அழகே அழகுடா! நடுநடுவே மொச்சக் கொட்டை என்ன சிரிப்பு சிரிக்கும்! காராமணி, கொள்ளு, பூண்டும் வரட்டு மிளகாயும் அரைச்சு விட்டுருப்பா.கவிதைடா!''.

- 'பலகாரத் திருவிழாவில் அப்புசாமி'.

10. வீதிக்கு யாரோ கிசுக்கிச்சு மூட்டினார்கள். அது சிரித்தது.

-'அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும்'.

1 comment:

Sri Srinivasan V said...

SIR
NAMASKARAMS AGAIN.
How do we THANK you sir
for all your EFFORTS.
i AM UNABLE TO write my feelings.
affly,
srinivasan.