Tuesday, November 02, 2010

இவர்களது எழுத்துமுறை - 13 - கு.அழகிரிசாமி

1. சிறுகதைகளைப் படைப்பதில் தாங்கள் கடைப்பிடிக்கும் நுணுக்க நெறிகள் யாவை?

என்ன உக்தியைக் கையாளலாம் என்பது பற்றி நான் தனியே யோசிப்பது கிடையாது.
நுணுக்கம், அமைப்பு இவைகளைப்பற்றியும் வரையறுத்துக்கொண்ட ஒருசட்ட வரம்புக்குள்
உட்பட்டு நான் எண்ணிப் பார்ப்பதும் கிடையாது. நேரடியாக அன்றாட வாழ்வில் பெறும்
அனுபவங்களை,அவற்றின் உணர்வுகளின் தூண்டுதலின் பேரில் மனத்தில் ஏற்படும்
கற்பனை வளத்துடன் சேர்த்து எழுதுகிறேன்.

2. மனிதத் தன்மையை விளைநிலமாகக் கொண்டு வளர்ந்து படரும் பல்வேறு கொடிகளே,
எழுத்துத் துறையில் நான் செய்யும் பல்வேறு பணிகள். சிலசமயங்களில் நான் கண்ட
உண்மைகளைக் கூறுவேன், நான் பெற்ற இன்பத்தை உணர்த்துவேன். நான் விரும்பும்
சீர்திருத்தை வற்புறுத்துவேன். நான் அழிக்க விரும்பும் தீமைகளைச் சாடுவேன்.
இத்தனையும் செய்யாவிட்டால் மன உலகில்கூட நான் சுதந்திர புருஷனாய் இருக்க
முடியாது.

3. எனக்கு அமைந்த எழுத்துக்கலையின் மூலம் நான் என்னையும், நான் வாழும்
உலகத்தையும் என்னளவில் உயர்த்த விரும்புகிறேன்.

4. என்.ஆர்.தாசன்:
------------
i. கு.அழகிரிசாமி ஒரு வித்தியாசமான நடையில் எழுதினார். அவரது நடையின்
குண அம்சங்கள் என்ன? அது எளிமையானது. நேரடித்தன்மை கொண்டது. சுற்றி
வளைத்து மூக்கைத் தொடாதது. மற்றவர்களைப்போல வார்த்தைகள் மூலம் மிரட்டவும்,
மயக்கவும், பிரமிப்பூட்டவும் முயலாமல், வார்த்தைகளுக்கான முக்கியத்துவத்தைக்
குறைத்து, அதன் மூலம் கதையின் உள்ளடக்கங்களைத் தூக்கலாகத் தெரிய வைத்தவர்.

ii. கு.அ வின் கதைகள், வாசிப்பில் மேலான உணர்ச்சிரூபங்களை
(visual feelings)த்தோற்றுவிக்கும். அவை சொல்லப்படுவதற்கு வசதியாகச்
சுருக்கப்படும் போது சாதரணமாகத் தோன்றும். காரணம் அவரது கதைகள் ஸ்தூல
நிகழ்ச்சிகளில் காலூன்றிநிற்கவில்லை. நவீனச் சிறுகதையின் கூறு என்று கூட இதைச்
சொல்லலாம்.

iii. பொதுவாக கதைக்கான விஷயத்தில் மரபுவழிப்பட்டதை ஒதுக்கி விடுவதுதான்
கு.அ வின் வழக்கம்.

iv. மன இயல்புகளையும், இயக்கங்களையும் நினைவு வழியே 'அப்ஸ்ராக்ட்'டாக
கு.அசொல்வதில்லை. தத்ததுவ வாசகங்களாகவோ, சித்தாந்த வாய்ப்பாடுகளாகவோ
அவர்மாற்றித் தருவதில்லை. சிறுசிறு சம்பவங்களின் மூலமே இதைச் செய்கிறார்.

v. பொதுவாகவே கு.அ வின் கதைகளில் ஆசிரியரே வெளியில் தெரியமாட்டார்.
பிரச்சினைகளும், அவற்றின் முகங்களுமே தெரியும். அவை அவைகளை, அவை
அவைகளுக்குரிய ஸ்தானங்களில் அமர்த்திவிட்டு அவர் ஒதுங்கி விடுவார்.

vi. உக்திகளை சிலுவைகளாக்கி அவர் கதைகளைச் சுமக்கச் செய்யவில்லை. அதே
சமயத்தில் கதையின் உள்ளடக்கத்திற்கேற்ப, இயல்பான முறையில், வாசகரது
புரிதலுக்கு வசதியாக உக்திகளைக் கையாண்டுள்ளார். o

No comments: