Monday, November 08, 2010

இவர்களது எழுத்துமுறை - 14 - டாக்டர். மு.வரதராசனார்

1. கேள்வி: கதைகளுக்கான கருத்து, சம்பவம் முதலியவைகளை நீங்கள் உண்மை
வாழ்க்கையிலிருந்து தேர்ந்து கொள்வதுண்டா? அல்லது எல்லாம் கற்பனையா?

பெரும்பாலும் சுற்றப்புறத்தார், நண்பர்கள், உறவினர்களின் வாழ்க்கையில்
காணும் உண்மைச் சம்பவங்களையே கதைகளுக்குத் தேர்ந்து கொள்கிறேன். சில
சமயங்களில் கற்பனைச் சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.

2. கேள்வி: நீங்கள் பலதரப்பட்ட நூல்களை எழுதியிருக்கிறீர்கள். அவற்றுள்
உங்களுக்கு மிகப் பிடித்தமானவை எவை?

நாவல்கள் கட்டுரைகள் எழுதுவதே.

3. தங்கள் நாவல்களில் எத்தகைய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன?

என் முந்தின நாவல்களில் காதலே முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால்
பின்னர்எழுதிய நாவல்களிலோ சமூக, பொருளாதாரப் போராட்டங்களே முக்கியமாக
இடம் பெற்றுள்ளன.

4. கதாபாத்திரங்களின் விஷயமும் இப்படித்தானா? அதாவது வாழ்க்கையில் காணும்
நபர்களையே கதாபாத்திரங்களாக அமைத்து விடுவீர்களா?

ஆம். அறிந்தோ, அறியாமலோ சில நாவல்களில் என்னையே கூட
கதாபாத்திரமாகச் சித்தரித்தரித்துக் கொண்டிருக்கிறேன்.

5. நீங்கள் வேகமாக எழுதக் கூடியவரா? அல்லது, சொல்லி எழுதச் செய்யும்
வழக்கமுண்டா?

இரண்டுமில்லை. என் எழுத்துக்களை நானேதான் எழுதி முடிக்கும் வழக்க
முடையவன். கட்டுரைகள் மட்டும் சில வேளைகளில் சொல்லி எழுதச் செய்வதுண்டு.

6. தினமும் ஒரு குறிப்பிட்ட மணிநேரத்தில் - இந்த அளவு எழுதி முடிக்க
வேண்டுமென்ற நிர்ணயம் உண்டா? ஒரு நாவலை எழுதி முடிக்க சாதாரணமாக
எவ்வளவு காலம் பிடிக்கும்?

தினமும் எழுதுவது எனும் வழக்கம் கிடையாது. நினைத்தபோது எழுதுவேன்.
ஒரு நாவலை எழுதி முடிக்க மூன்று முதல் ஆறு மாதங்கள் பிடிக்கும்.

7. நாவலை எழுதி முடித்தபின் அதைப் படித்துத் திருத்தங்கள் செய்வதுண்டா?

அநேகமாக இல்லை என்றே சொல்லலாம்.

8. வெறும் பொழுது போக்காக என்று நான் எதையும் எழுதுவதில்லை. இடையிடையே
பொழுபோக்கு அம்சங்களை வாசகர்களைக் கவருவதற்கான ஒரு கருவியாகவே
பயன்படுத்துகிறேன். 0

No comments: