Saturday, June 04, 2011

இவர்களது எழுத்துமுறை - 40.பி.எஸ்.ராமையா.

1. கேள்வி (எழுத்து): முந்நூறு கதைகள் எழுதிய நீங்கள், 'சிறுகதை உருவம்'
என்கிறார்களே, அதைப் பற்றித் திட்டமாகச் சொல்ல முடியுமா?

பதில்: உண்மையை அப்பட்டமாகச் சொல்வதென்றால், இன்றுவரை எனக்கு
சிறுகதை உருவத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. நான் கதைகளை எழுதும்
போது அதைப் படிக்கப் போகிற மக்களைப் பற்றிய பிரக்ஞை கூட எனக்குக்
கிடையாது. எங்கேயோ தொடங்கி ஒரே ஓட்டமாக ஓடி கதையை எங்கோ
முடிப்பேன். அதில் விழுந்ததுதான் அதன் உருவம். அதன் விதி. இன்றுவரை
நான் ஒரு கதை கூட உருவத்தைப் பற்றி சிந்தித்தோ, தெரிந்தோ எழுதியது
இல்லை.

2. கேள்வி: 'மலரும் மணமும்' சிறுகதைக்குப் பிறகு உங்களுக்கு சிறுகதை
பற்றிய உருவப் பிரக்ஞை வந்து விட்டதா?

பதில்: 'மணிக்கொடி' சகவாசம் மூலம் சிறுகதை பற்றிய பிரக்ஞை தெளிவு
பெற்றது. இருந்தும் வடிவம் பிடிபடவில்லை. வெளி நாட்டிலே அதற்கு மவுசு
அதிகம். எனவே அதற்குள்ள மதிப்பு மார்க்கட்டு எல்லாம் தெளிவாகி விட்டது.

3. கேன்வி: ஒவ்வொரு கதைக்கும் ஒரு வரலாறு உண்டா? அப்படி இருக்கத்
தான் வேண்டுமா?

பதில்: வாழ்க்கையில் எனக்கு நிகழும் சிறு நிகழ்ச்சிகளில் கூட நாடக
ரசத்தைக் காணும் மனப் பழக்கம் வளர்ந்து வந்திருக்கிறது. இந்த மனநிலை
கதைகளில் உணர்ச்சி வேகத்தை ஏற்றுவதற்கு, நாடகச் சுழிப்புகளைக்
கொண்டு வருவதற்கு மிக மிக உதவியாக இருக்கிறது.

4. கேள்வி: தங்கள் கதைகளில் 'ஐரனி' என்கிற விடம்பனம் அதிகமாகத்
தொனிப்பதாகத் தெரிகிறது. அதனால் தங்கள் வாழ்க்கைப் பார்வையே
அதுதான் என்று கொள்ளலாமா?

பதில்: நான் பிறந்தபோது வாங்கிக் கொண்டு வந்த வரமா அல்லது வளர்ந்த
போது ஏற்பட்ட அனுபவங்களின் விளைவா என்று என்னால் சொல்ல முடியாது.
ஆனால் நான் கதை எழுதும் போது இந்த விடம்பன மனப்போக்கு பீறிக்கொண்டு
மேலோங்கி வந்து விடுகிறது. அது நான் மனதார தெரிந்து செய்வது அல்ல.
வாழ்க்கையில் இந்த விடம்பனம் நிறைந்து கிடக்கிறது. ஆகையால் நொடிகளில்
விழும்போது அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்ற மனப்போக்கு
வளர்ந்திருக்கிறது. இது என் கதைகளிலிருந்து எனக்குக் கிடைத்த பலனா அல்லது
என்னிடமிருந்து கதைகளில் வெளியாகும் மன நிலையா என்பதை என்னால்
சொல்ல முடியவில்லை.

5. கேள்வி: உங்கள் கதைகளை நீண்டகாலமாகப் படிக்கிறவர்கள் பழைய ராமையா,
புதிய ராமையா என்று பிரித்துப் பேசுகிறார்களே, அது சரிதானா?

பதில்: அது சரிதான் என்று எனக்குத் தோன்றுகிறது. என் மனப்போக்கிலோ,
அழகு உணர்ச்சியிலோ, அதை எடுத்துக் காட்டும் ஆர்வத்திலோ எவ்வித
மாறுதலும் நிகழவில்லை. ஆனால், மணிக்கொடி காலத்தில் எழுதும் போது நான்
உணர்ச்சி வெப்ப நிலையில் இருந்த வாசகர்களுக்கு எழுதினேன். இன்று வியாபாரத்
துறையில் நடத்தப்படும் பத்திரிகைகளின் வழியாக லட்சக்கணக்கானவர்கள் படிப்ப
தற்காக எழுதுகிறேன். ஆகையால் கட்டட அமைப்பு கதை சொல்லும் நடை
ஆகியவற்றை மனதறிந்து மாற்றி எழுதுகிறேன். இரண்டிலும் இலக்கியத்தன்மை
இருக்க வேண்டும் என்ற குறிகோள் என் உள்ளே இருக்கிறது. 0

No comments: