Monday, December 10, 2012

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8.தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூ



 ”இதென்ன கழைக்கூத்தாடியின் கூச்சல் போலிருக்கிறதே!’’ என்று பிரமித்துவிட்டார் ஒரு நண்பர். யார்? ஸ்ரீ ப.ராமஸ்வாமி அவர்கள்தான். “ஆஹா ஊகூ!” என்ற தலைப்பு அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கட்டுரை அவருக்குப் பிடித்தது; அதன் விறுவிறுப்பும் வேகமும் தொனியும் பிடித்தன. கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை எடுத்து, அதை ஆமோதிக்கும் முறையில், ஒரு சிறு குறிப்புடன், ஒரு தினசரி பத்திரிகையின் இலக்கியப்பகுதியிலும் கூட அவர் எழுதிவிட்டார். கட்டுரை ’சக்தி’ யில் முதன் முதலாக வெளிவந்தபோது, இப்படி அவர் செய்தார்.

அவருக்கென்ன? தலைப்பு இன்னும் பல பேருக்குப் பிடிக்காது. உண்மையைச் சொன்னால், எனக்கே அது பிடிக்கவில்லை. அதாவது, சில சமயம., மற்றும் பல சமயங்களில், நன்றாய்ப் பிடிக்கிறது. அப்படிப் பிடித்தமாய் இருந்த ஒரு சமயத்தில், புத்தகத்துக்கே  இந்த் தலைப்பு  இருக்கட்டுமென்று முடிவு செய்துவிட்டேன். செய்த முடிவு முடிவுதான். அதை எதற்காக மாற்றவேண்டும்? வாழ்ந்த வாழ்வைத் திருத்தி அமைக்க முடியுமா? வாழ்ந்த வாழ்வுக்கு வருந்துவது  சாவை அழைப்பதாகும். அது வாழ்வை நலியச் செய்யும்; நரம்புகளைச் சீர்குலைக்கும். வாழ்ந்த வாழ்வு என்ற ஞாபகச் சின்னத்தை, வாழப்போகும் வாழ்வைத் திருத்தும் வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும். அந்த ஞாபகச் சின்னத்தை அழிக்க முயல்வது கோழையின் வேலை.

    இத்தொகுப்பில், ஆறு கட்டுரைகள் இருக்கின்றன. இந்தக் கட்டுரைகள் அனைத்தும் யுத்த காலத்தில் எழுதப்பட்டவையாகையால், இவைகளில் அதன் எதிரோலி இருக்கும்.

கலையையும் இலக்கியத்தையும் பற்றி, என் கருத்துக்களில் சில இந்தக் கட்டுரைகளில் அடங்கி இருக்கின்றன. நீங்களும் யோசித்துப் பாருங்கள். சரியென்று தோன்றினால் ஏற்றுக்கொள்ளுங்கள். ஏற்கெனவே மாறுபட்ட கருத்துக்கள் இருந்து, இப்போது நான் சொல்வதே சரியென்று தோன்றினால் உங்கள் பழைய கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால், என் விஷயம் என்னவென்    று கேட்கிறீர்களோ! நான் மாற்றிக் கொள்ளப்போவதில்லை. ஏனென்றால், அது என் தற்போதைய நிச்சயம். தவிர, ’புத்தகத்தில் நான்’ என்ற என் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.என் காரணம் புரியும்.


       1946                                                                                                                          தி.ஜ.ர

No comments: