Thursday, September 09, 2004

நினைவுத்தடங்கள் - 23

எனது பல்வேறு ரசனைக்கு, இளமையில் எங்களூரில் நிகழ்ந்த பலவித திருவிழாக்களும் காரணமாய் இருந்திருக்கின்றன. முக்கியமாக ஒவ்வொரு கோடையிலும் நடைபெற்ற 'காமுட்டி' என்கிற காமதகனம், திரௌபதிஅம்மன் தீமிதி, சிறுத்தொண்டர் அன்னப்படையல் போன்ற
விழாக்களில் நடைபெறுகிற கூத்து, பாட்டு போன்றவை என் கலைரசனைக்கு அந்தச் சின்ன வயதிலேயே ஊக்க சக்தியாய் இருந்தன. அறுவடைக்குப் பின் மக்களிடம் கொஞ்சம் பணப்புழக்கம் அதிகம் என்பதால் இத்தகைய திருவிழாக்கள் கோடையில்தான் சாதாரணமாய் நடக்கும்.

காமன்பண்டிகையில் பெரிதும் ஈர்ப்பது அதில் பாடப்படும் பாடல்கள்தாம். இப்பொதெல்லாம் காமன் பண்டிகை அனேகமாக அருகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். கிராமங்களிலும் தொலைக்காட்சி மக்களை ஆக்கிரமித்திருப்பது மட்டுமல்ல- காமன் பண்டிகைப் பாடல்களைப் பாட வல்லவர் அனேகமாக எல்லா ஊர்களிலும் அற்றுப் பொனதும் காரணம் என்றே சொல்ல வேண்டும்.

எங்கள் ஊரில் அருமையான குரல்வளமுடைய முதியவர்கள் நாலைந்து பேர் அப்போது இருந்தார்கள். பரம்பரை பரம்பரையாய் கைமாறி வந்த பாடல்கள் கொண்ட கைப்பிரதிகளை அவர்கள் பொக்கிஷம் போல் போற்றிப் பாதுகாத்து வந்தனர். அவர்களது பாடல்களைக் கேட்கவென்றே வெளியூரிலிருந்தும் வருவார்கள். உருக்கமும் இனிமையும் நிறைந்த அப்பாடல்கள் இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. காமன் பண்டிகைக்குக் காப்புக்கட்டிய நாளிலிருந்து இரவில் எல்லோரும் சாப்பிட்டான பிறகு ஊர் மந்தையில் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே போட்டிருக்கும் பந்தலின் அருகே கூடுவார்கள். ரதி, மன்மதன் சார்பில் பாட இரு குழுவாக பரம்பரை யாகப் பாடுகிறவர்கள் எதிரெதிரே கயிற்றுக்கட்டிலில் கையில் பாடல்கள் எழுதிய நோட்டுப் புத்தகங்களுடன் அமர்ந்திருப்பார்கள். சற்றுத் தள்ளி ஒதுக்குப் புறமாக பறைக்
கொட்டுகளுடன் உள்ளுர் சேரிவாசிகள் பறைகளை நெருப்பில் காய்ச்சித் தயார் நிலையில் நிற்பார்கள்.

விநாயகர் துதியுடன் நிகழ்ச்சி தொடங்கும்.

'மூலாதரப் பொருளே லீலாவிநோதகரே
முனமது கைப்பொருளே முக்கண்ணார் தன் மகனே!'

என்று முதல் அடியைப் பாடியதும் 'டண் டண்' என்று ஒற்றைக் கொட்டு முழங்கும். பிறகு அடி அடியாகப் பாடிவர ஒற்றைக்கொட்டு ஒவ்வொரு வரிக்கும் தொடர்ந்து முழங்கும். பாடல் வரி முடிகையில் சற்று நீட்டி 'வீ....நாயகரே......வாருமையா' என்று பாடுபவர் முடித்ததும் 'டண்டண் டணக்குடக்.....டண்டண் டணக்குடக்......' என்று ஆவேசமாய் எல்லாப் பறைகளும் முழங்குகைய்¢ல் நமக்கு ஒரு சிலிர்ப்பு உண்டாகும். இப்படி
நடுநிசி கதை தொடரும்.

காமதகனத்தன்று ஊரை ஒட்டியுள்ள வெள்ளாற்றுக்குப் போய் கலசத்தில் நீர் மொண்டு, கொட்டு முழக்குடன் கொண்டு வருவார்கள். உடன் வந்திருக்கிற இளைஞர்களில் திருமணமாகாத இருவரை முன்னறிவிப்பின்றி நீரில் பிடித்துத் தள்ளி குளிக்க வைத்து ரதி மன்மதன் வேடமணிய வைப்பார்கள். முன்பே சொல்லிவிட்டால் யாரும் வேடம் தரிக்க முன் வரமாட்டார்கள். ரதிக்கு எண்ணை கலந்த மஞ்சள் வண்ண மும், மன்மதனுக்கு பச்சை வண்ணமும் முகத்திலும் உடலிலும் பூசப்படும். அந்த வேடத்துடனே அவர்கள் கலசத்துடன் காமதகனம் நடைபெறும் இடத்துக்கு வருவார்கள். ரதி மன்மதனுடன் நெற்றிக்கண்ணால் மதனை எரிக்கப் போகும் பரம சிவனுக்கும் ஒரு இளைஞனை
வேடமிடச்செய்து காவியுடையுடன் கலசத்துடன் அழைத்து வருவார்கள்.முன்பே பந்தலில் நடப்பட்டுள்ள ஆலங்கிளையின் அடியில் பரம சிவன் உட்கார்ந்து தபசில் ஆழ்வார். அருகில் சொக்கப்பனை போன்ற அமைப்பில் ஒரு கூம்பு வடிவத்தில் கட்டப் பட்டுள்ள துவரைமிலார்களின் நடுவே மன்மதன் உருவம் வரையப்பட்டுள்ள படம் வைக்கப்பட்டிருக்கும். பரமசிவம் தபசிருக்கும் ஆலங்கிளைக்கும் மன்மதன் படம் உள்ள கூம்புக்கும் இடையே இரட்டைவாணம் கோத்த கயிறு கட்டப்பட்டிருக்கும். தீபாராதனை முடிந்ததும் சகடையில் ரதி மன்மதன் சுதைச்
சிற்பங்கள் ஏற்றப்பட்டு எதிரே ரதி மன்மதன் வேடமிட்டவர்கள் கைகளில் வில்லேந்தி முன்னே நடக்க ஊர்வலம் புறப்படும். இனிமேல்தான் சுவாரஸ்யமெல்லாம்.

மன்மதன் பரமசிவனின் தபசைக் கலைக்கப்போகிறான். ரதி அவனிடம் அப்படிச் செய்து தன் தந்தையாகிய சிவனின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று இறைஞ்சுவாள். இந்தக் கட்டத்துக்காகவே அனைவரும் காத்திருப்பார்கள். ரதி, மன்மதன் இருவர் பக்கத்திலும் அந்தக் கட்சிக்காகப் பாடுபவர்கள் கையில் நோட்டுடன் இருப்பார்கள். முதலில் ரதியின் உருக்கமான வேண்டுதல் தொடங்கும். பாடுகிறவர் வழக்கம் போல ஒவ்வொரு அடியாய்ப் பாட பறைக்கொட்டு தொடர்ந்து முழங்கும். அப்பாடல் முடிந்ததும் பறைகள் ஒரு உத்வேகத்தொடு முழங்க ரதி வேடமிட்டவர் கையில் வில்லுடன் மன்மதனை நோக்கிப் போய்ப் போய்த் திரும்புவார். பிறகு மன்மதனின் மறுப்புப் பாடல். அதற்கேற்றபடி கொட்டு - மன்மதனின் எதிர் நடை என்று தொடரும்.

மன்மதன் சிவனைப் பழித்து 'அடி! உங்கப்பன் பேயாண்டி......' என்று பாடும்போது ரதி வேடமிட்டவருக்கு ஆவேசம் வந்து விடும். அதற்காகவே பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் இருவர் அவர் கீழே விழுந்து விடாதபடி தாங்கிப் பிடிப்பார்கள். அவருக்கு மட்டுமல்ல - முன் ஆண்டில் ரதி வேடமிட்டவர் அருகில் இருந்தாலும் மன்மதனின் ஏச்சைக் கேட்டு ஆவேசமடைந்து சாமியாடுவார்கள். அவர்களையும் தாங்கிப் பிடிப் பவர்களும் உண்டு. விழட்டும் என்று விட்டுவிடுவதும் உண்டு. இப்படி நான்கு பிரதான தெருக்கள் வழியில் ஊர்வலம் தொடரும். பந்தலுக்குத் திரும்பும்வரை ரதி மன்மதன் சம்வாதம் அருமையான பாட்டுகளில் தொடரும்.

பந்தலுக்குத் திரும்பியதும் மன்மதன் தபசிருக்கும் சிவனை நோக்கி மலர் அம்பு எய்யும் விதமாக, மன்மதன் படம் இருக்கும் பக்கத்தில் தொங்கும் இரட்டை வாணம் பற்ற வைக்கப்படும். உடனே அது 'சுர்'ரென்று சீறியபடி சிவனை நோக்கிப் போகும். மறுமுனையை அடைந்ததும் இரட்டை வாணத்தின் மறுவாணம் தானாகவே பற்றிக் கொண்டு மன்மதனை நோக்கிச் சீறிப்பாயும். சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்து காமனை எரிப்பதாக அர்த்தம். காமன் படத்தின் மீது கற்பூரத்தைக் கொளுத்துவார்கள். படம் பற்றியெரிய அதைத்தாங்கி நின்ற துவரை மிலாறும் 'சட சட' வென எரியும் . அதிர் வேட்டு முழங்கி காமதகனம் முடிந்ததை ஊருக்கு அறிவிக்கும்.

பி¢£றகு ரதி, சிவனிடம் அழுது புலம்புவதும் மன்மதனை மீண்டும் உயிப்பிக்க வேண்டுவதுமான பாடல்கள் கொட்டு முழக்குடன் தொடரும். அது ஒப்பாரி வடிவில் வெகு உருக்கமாய் இருக்கும். இந்தப் பாடல்களின் உருக்கத்தை ரசிக்கவென்றே நான் ஒவ்வொரு கோடையிலும் அது நடக்கிறவரை ஊருக்குப் போய் வந்தேன். அது தந்த ரசனை இன்பத்தை என் பிள்ளகளுக்கும் தர விரும்பினாலும் அது இனி கிட்டாது என்பதுதான் சோகம்! எங்கள் வெள்ளாறும் வற்றிப் போனதும் அதைவிடவும் சோகம்!

-தொடர்வேன்.

- வே.சபாநாயகம்

3 comments:

Unknown said...

வணக்கம் தோழரே....
தங்களின் விருப்பம் நிரைவேற அழைக்கிறோம்....
வரும் மாசி திங்களில் எங்கள் ஊரில் காமன் பண்டிகை கொண்டாடவுள்ளோம்...
தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வந்து விழாவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்பு:- ஹரி - 9047031704
கார்மேகம் - 9698065933

Unknown said...

என்னையும் தொடர்பு கொள்ளுங்கள்... ranjithdsjr1112@gmail.com

YAA-KAR' Velayudham said...

Please call me. my Mobile number: 9840934561