Tuesday, June 14, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 2.ஆசிரியர் உரிமை(1)

'படைப்புகளைச் சுருக்கவோ திருத்தவோ ஆசிரியருக்கு உரிமை உண்டு'
என்று அநேகமாக எல்லா பத்திரிகைகளும் குறிப்பிடுவதுண்டு. 'தன் படைப்புகளில்
கை வைக்கக்கூடாது' என்று கறாராகச் சொல்லும் எழுத்தாளர்களும் உண்டு.
பத்திரிகையின்கொள்கை, பக்க அளவு காரணமாக படைப்புகளைச் சுருக்கவோ,
பகுதிகளை வெட்டவோ நேர்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எழுத்தாளர்
எழுதாததை - தன் கருத்தாக ஆசிரியர் சொல்ல நினைப்பதை - தான் பிரசுரிக்கும்
படைப்பில் நுழைப்பதற்கு உரிமை எடுத்துக் கொள்வதைத்தான் புரிந்து கொள்ள
முடியவில்லை. எனக்கு அப்படி ஒருஅனுபவம் நேர்ந்தது.

ஒரு பிரபல இலக்கியப் பத்திரிகையில், ஒரு பிரபல நாவலுக்கு நான் மதிப்புரை
எழுதினேன். நாவலாசிரியர் புதியவர். இளைஞர். அதற்கு முன் பத்திரிகையில்
எழுதிய அனுபவம் இன்றி, மு.வ போல நேரடியாக நூலாகப் பிரசுரிக்கப் பட்டு
பெரிதும் பேசப்பட்ட நாவல் அது. என் மதிப்புரையை வெளியிட்ட இதழாசிரியர்
மதிப்புரையின் இறுதி வரியாக 'இந்த நாவலைப் படித்து முடித்ததும் புகழ் பெற்ற
'...........' என்ற ஆங்கிலநாவல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை'
என்று சேர்த்து வெளியிட்டிருந்தார். எடுத்த எடுப்பிலேயே, இவ்வளவு சின்ன வயதில்
இந்த எழுத்தாளருக்கு இப்படி ஒரு பிரபலம் கிடைத்திருப்பது அவரை உறுத்தியதோ
என்னவோ! தான் சொல்லமுடியாததை என் தலையில் கட்டி விட்டார்.

பிரசுரமான மதிப்புரையைப் பார்த்த எனக்கு, நான் எழுதாத அவதூறை நான்
எழுதியதாக வெளியிட்டதில் எரிச்சல் ஏற்பட்டது. அடுத்த வாரம் அந்தப் பத்திரிகை
அலுவலகத்துக்குப் போன போது, ஆசிரியரிடம், "என்ன இப்படிச் செய்து விட்டீர்களே?
நான் அப்படிக் குறிப்பிடவே இல்லையே!" என்று ஆதங்கப் பட்டேன். அதற்கு அவர்,
"அதனால் என்ன? திரு.'........' தான் அப்படிச் சொன்னார். அவர் நிறைய ஆங்கில
நாவல்கள் படிப்பவர்!" என்றார் கொஞ்சமும் சங்கடமின்றி. "அப்படியானால் அவரையே
அப்படி எழுதச் செய்திருக்கலாமே! நாவலாசிரியர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?"
என்று கேட்டேன். அதெல்லாம் ஒன்றும் நினைக்க மாட்டார். விடுங்கள்" என்று
கழற்றிக்கொண்டார். ஆனால், எனக்குப் பரிச்சயமான அந்த நாவலாசிரியரின் முகத்தில்
எப்படிவிழிப்பது என்ற சங்கடம் எனக்கு ஏற்பட்டது.

பத்திரிகை ஆசிரியரிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்ததுமே அந்த
நாவலாசிரியரை வாயிலில் சந்திக்கும்படி நேர்ந்து விட்டது. குசலம் விசாரித்த
பின் அவர் கேட்டார், "அந்த ஆங்கில நாவலை நீங்கள் படித்திருக்கிறீர்களா?".
எனக்குச் சங்கடமாகி விட்டது.'இல்லை! சத்தியமாக அதை எழுதியதும் நான் இல்லை!'
என்று கத்தத் தோன்றியது. பதற்றத்தைக் குறைத்துக் கொண்டு நடந்ததைச் சொல்லி
வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டேன். இன்று மிகவும் பிரபலமாகி விட்ட அவர்,
பெருந்தன்மையுடன் "போகட்டும் விடுங்கள்" என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.

கதைகளில் அல்லது கட்டுரையில் அவசியம் ஏற்பட்டு ஒரு வரி சேர்ப்பதால்
படைப்புக்கு வலு ஏற்படும் என்று தோன்றினால் ஆசிரியர் உரிமை எடுத்துக்
கொண்டு சேர்ப்பதை வேண்டுமானால் ஏற்கலாம். ஆனால் இப்படி தன் விருப்பு
வெறுப்புகளைக் காட்ட, படைப்பாளியின் எழுத்தைப் பயன்படுத்திக் கொள்ளும்
உரிமையை எப்படி ஏற்க முடியும்? 0

1 comment:

கே.ஜே.அசோக்குமார் said...

யாரந்த நாவலாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர் என்பதை எழுதுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்.