Saturday, February 24, 2007

நினைவுத் தடங்கள் - 38

எனது இளமைப் பருவத்தில் எனக்கு ஓவியத்தில் ஈடுபாடு ஏற்படக் காரணமானவர்களையும், அதற்கான சூழ்நிலைகளையும் முன்பே சொல்லி இருக்கிறேன். கோயிலுக்காக மரச்
சிற்பங்கநளையும் சுதைச் சிற்பங்களையும் செய்த எங்கள் ஊர் அப்பாவு ஆசாரி என்கிற தச்சாசாரியும், எபோதும் காதில் கூர் சீவிய பென்சிலைச் சொருகிக் கொண்டு ஊரில் சுவர் கிடைத்த இடங்களில் எல்லாம் தெய்வ உருவங் கநளை வரைந்து கொண்டிருந்தவருமான அவர் மகன் நடேச ஆசாரியும் தான் எனக்குப் பிள்ளைப் பிராயத்திலேயே ஒவிய, சிற்பக் கலைகளில் மோகத்தை உண்டாக்கியவர்கள். அவர்கள் அவ்வேலைகளில் ஈடுபட்டிருந்த போது நான் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்ததால் அவற்றின் மீது நாட்டம்
ஏற்பட்டது.

கொஞ்சம் வளர்ந்து ஆரம்பப் பள்ளியில் படித்தபோது எனக்கு ஓவியம் வரைய வழிகாட்டியாக இருந்தவர் என்னை விட இரண்டு வகுப்பு மேலே படித்தவரும் எங்கள் ஊர்ப் புரோகிதரின் மகனுமான ராமு என்கிற ராமச்சந்திரன் என்பவர். அவர் ஒரு டிராயிங் நோட்டு வைத்துக் கொண்டு வரலாற்றுப் பாடப்புத்தகத்திலுள்ள அக்பர், சிவாஜி, தாஜ்மஹால் படங்களையெல்லாம் தடியான ஒரு பென்சிலால் அப்படியே அச்சு அசலாய் பெரிய அளவில் வரைந்து எங்களை எல்லாம் பிரமிக்க வைப்பார். நானும் அவரைப் போலவே டிராயிங் நோட்டு வாங்கி அவர் வரைந்த படஙங்களை எல்லாம் வரைவேன். அவர் அதற்காக என்னைப் போட்டியாகக் கருதாமல் நான் வரைந்தவற்றைத் திருத்தித் தருவார். இதனால் எங்கள் நட்பு வளர்ந்தது.

எங்களூர்ப் படிப்பு முடிந்ததும் அவர் மேலே படிக்க வசதியில்லாதாலும் அருகில் மேல்வகுப்புள்ள பள்ளி இல்லாததாலும் சிதம்பரத்தில் அவரது சகோதரி வீட்டுக்குப் போய் அங்கு
அப்போது பிரபலமாய் இருந்த சுதைச்சிற்பியும் ஓவியருமான யான கோவிந்தராஜு என்பவரிடம் அவரது ஓவிய வேலைகளுக்கு உதவியாளராகச் சேர்ந்தார்.அவரிடம் பல ஆண்டுகள் உடனிருந்து சுதைச்சிற்பஙகளுக்கு வண்ணம் தீட்டுவதிலும் சுவர் ஓவியங்கள் வரையவும் தேர்ச்சி பெற்றார். அதற்குள் நான் பள்ளிப் படிப்பெல்லாம் முடிந்து கல்லூரிப் படிப்புக்காகச் சிதம்பரம் சென்றதும் அவருடன் நெருக்கமான தொடர்பும் அதன்மூலம் ஓவிய நுட்பங்களை அவரிடமிருந்து கற்றுக் கற்றுக்கொள்ளவும் முடிந்தது.

என் கல்லூரிப் படிப்பு முடிந்து வீடு திரும்ப்஢யபோது அவரும் சுயமாக ஓவிய வேலைகளுக்குப் போகும் தகுதி பெற்று ஊருக்கு வந்து விட்டார். இப்போது எங்கள் நட்பு மேலும் நெருக்கமாயிற்று. எப்போதும் - தூங்குகிற சாப்பிடுகிற நேரம் தவிர ஒன்றாகவே இருந்தோம். அனேகமாக நான் அவரது வீட்டில்தான் அதிகம் இருந்தேன். அவரது அம்மாவின் பேச்சு எப்போதும் ரசமாக இருக்கும். பேச்சில் அநாயசமாக நகைச்சுவை துள்ளும். உவமைகளும் வருணனைகளும் கதை எழுதுகிறவர்கள் தோற்று விடுவார்கள். அவர்கள் சொல்லும் பழமொழிகளும் சொலவடைகளும் நாம் வழக்கமாய்க் கேட்பதற்கு மாறாய் வித்தியாசமாய் இருக்கும். 'சுண்டைக்காய் கால் பணம் சுமைகூலி முக்கால் பணம்' என்பதை 'வெடிப்புலே விழுந்தது கால் பனம் வெட்டி எடுக்க முக்கால் பணம்' என்பது போல வித்தியாசமாகச் சொல்வது சிரிக்க வைக்கும்.

ஒருமுறை நான் அவர்கள் வீட்டுக்கு, ஊரிலிருந்து வந்திருந்த என் அண்ணன் குழந்தையை - நல்ல சிகப்பு - பளிச் சென்ற வெய்யலில் தூக்கிக் கொண்டு போனேன். துரத்திலேயே
அந்த அம்மா அதைப் பார்த்து விட்டார்கள். நான் நெருங்கியதும் "வா, யாரு அண்ணா கொழந்தையா? காக்கா மொளாப்பழம் தூக்கிண்டு வரமாதிரி இருக்கு!" என்று என் கருப்பு நிறத்தை குழந்தையின் நிறத்துடன் ஒப்பிட்டுச் சொன்னது நக்கலாகப் உறுத்தாமல் அதில் இருந்த உவமை ரசனையை மிகவும் ரசித் தேன்.அப்படி அவர்கள் பேச்சைக் கேட்டுக்கேட்டு எனக்கு என் கதைகளில் அக்ர காரத்து மொழி சரளமாய் விழுவதற்கு உதவியது.

நண்பரின் அப்பா புரோகிதராய் இருந்தாலும் புதிய சிந்தனைகளும் மற்றவர்களிடமிருந்து தன்னைப் பிரித்துக் காட்டுகிற செயல் பாடும் உடையவர். கூரைவீடுதான். ஆனால் அதில் அவர்
அரசருக்கான கம்பீரத்துடன் வாழ்ந்தார்.அவருக்குப் படியளக்கிற உள்ளூர்ப் பணக்காரர்களை விட அவர் நாகரீகமாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்தார். வேத, புராண விஷயங்களை கேட்பவர் வாய்பிளந்து ரசிக்கிற மாதிரியான சொல் வளமும் ரசனையும் மிக்கவர். என் அப்பாவிடம் நான் சிறுவயதில் தமிழ் புராணக் கதைகளையும் தமிழ்க் கவிதைகளையும் கேட்டது
என் எழுத்துக்கு உரமாக அமைந்த மாதிரி அவரிடம் கேட்ட சம்ஸ்கிருத இலக்கியக் கதைகளும் கருத்துக்களும் கூடப் பின் பலமாய் உதவுகிறது.

எங்கள் ஊரில் முதன்முதலாய் கிராமபோன் வாங்கி ஊரே அவர் வாசலில் நின்று பிரமிக்க வைத்தது அவர்தான். ஒற்றைக் குதிரை பூட்டிய சின்ன ரேக்ளாவில் தான் அவர் பக்கத்துக்
கிராமங்களுக்குப் புரோகிதத்துக்குச் செல்வார்.அதை வேடிக்கை பார்க்கவே சிறுவர்கள் அவர் வீட்டுக்கு முன்தினமும் கூடி நிற்பார்கள்.

அவர்கள் வீட்டில் அனைவருமே நல்ல சங்கீத ரசனையும் குரல் வளமும் உடையவர்கள். நண்பர் நன்றாகப் பாடவும் மிமிக்ரி செய்யவும் வல்லவர். அதனால் எங்காவது கச்சேரிக்குப் போய்வந்தால் அதே பாணியில் அச்சு அசலாய் முக சேஷ்டை களுடன் எனக்குப் பாடிக் காட்டுவார். மதுரை மணி ஐயரின் சங்கீதத்தில் எனக்கு ருசி ஏற்பட்டது அப்படித்தான். சினிமாவுக்குப் போய் வந்தாலும் அதன் கதை பாடல் முழுதும் அப்படியே சொல்லி உடனே அப் படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை உண்டாக்கி விடுவார். அப்போதைய சினிமாக்கள் எல்லாம் 40 பாடல்கள், 50 பாடல்கள் என்று இருக்கும். பாபநாசம் சிவன் பாடல்களை தியாகராஜ பாகவதரும், பி.யூ.சின்னப்பாவும்பாடி, தமது அற்புதமான குரல் வளத்தால் சினிமாவின் மூலம் தமிழ் இசையைப் பரப்பி வந்தனர். நண்பர், நான் போய்ப் பார்க்க முடியாத அவர்களது பாடல்களைப் பாடி எனக்கும் சங்கீத ரசனையை உண்டாக்கினார். ஒவ்வொரு பாடலும் என்ன ராகம், என்ன தாளம் என்றெல்லாம் சொல்லுவார். கே.பி.சுந்தராம்பாள் நடித்த ஜெமினியின் ஓளவையார் பாடல்களை அதே கனத்துடனும் உருக்கத்துடனும் பாடி என்னை அப்படத்தை தேடிப் பார்க்க வைத்தது இன்னும் பசுமையாய் நினைவில் நிற்கிறது. அவர் பாடியதும் கண் முன்னால் நிற்கிறது. அப்பாடல்கள் இன்றும் - 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது. இப்படி எத்தனையோ பேர் என் இளமையில் என்னைப் பாதித்து என் கலை, இலக்கிய ரசனைகளை வளர்த்து இன்று நானும் ஒரு ரசிகனாகவும் படைப்பாளியாகவும் ஆவதற்கு உதவியிருக்கிறார்கள். அது இளம்பிராயத்தில் வேறு யாருக்கும் கிடைக்காத பாக்யம் என்றே சொல்ல வேண்டும்.

- வே.சபாநாயகம்.

No comments: