Friday, February 09, 2007

உவமைகள் - வருணனைகள் - 48

நான் ரசித்த உவமைகள் - வருணனைகள் : 48

விமலாதித்த மாமல்லன் கதைகளிலிருந்து:


1. வீட்டிற்கு ஸ்நோஸிம் அடித்திருந்தது. வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும், சமைந் திருக்கும் பெண்ணின் தாயாரைப் போல, ரொம்ப ஜாக்கிரதையுடன் கண்காணித்து வந்தாள் மாமி. வீட்டின் வெளிச்சுவரில் போஸ்டர்களை யாரும் ஒட்டிவிடாமல் இருப்பதற்காக கருங்கல் ஜல்லிபதித்து,அதன்மேல் ஸ்நோஸிம் அடித்து வைத்தாள். தேர்தல் சமயத்தில் மாமியின் பார்வையையும் மீறி ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தத்தம் சின்னங்களை சுவரில் எழுதி விட்டார்கள். சுயேச்சை ஆசாமி கூட, தன் சின்னமான சைக்கிளைத் தாரால் வரைந்து விட்டிருந்தான். மாமிக்கு ஏகக் கோபம். அந்தத் தேர்தலில் மாமி ஓட்டுப் போடப் போகவில்லை.

-'இலை' கதையில்.

2. சுவரைக் கையால் பிடித்தபடி ஓரமாக நடந்து சப்தம் செய்து விடாதவாறு குளியல றைக் கதவை மெல்ல திறந்தான். கால், சொம்பில் பட்டுவிட பெரிய உளறல் போல அது உருண்டபடி சப்தமிட்டது. அவன் திடுக்கிட்டவனாய் அசைவொடுங்கி நின்றான். தூக்கம் அறுந்தவராய் அப்பா மிரட்டல் தொனியில் குரல் கொடுத்தார்.

- 'சரிவு'.

3. இருபத்தியெட்டு வயதிற்குள் ஒரு பெண் இப்படியா நார்நாராகி விடுவாள். பழைய ஜமுனா இவளுடைய பெண்ணோ என நினைக்குமளவுக்கு மூப்படைந்து விட்டாள் ஆறே வருஷத்தில்.

- இழப்பு'.

4. அந்த அறையில் இருந்த கண்ணாடியின் ஒரு பகுதி உடைந்து விட்டிருந்ததால், நெடுக்காக வைத்துப் பார்க்க சாத்யப்படவில்லை. ஜன்னல் மீது குறுக்காக வைத்தால் தலைமுடியையும் கண்ணையும் சேர்ந்தாற்போல் பார்க்க முடியவில்லை. ஏதேனும் ஒன்றை மட்டுமே பார்த்துச் சீவினால் மனசுக்கு உகந்தபடி அமையாமல் போனது. கொஞ்சம் உடம்பைக் குறுக்கிக் கொண்டே தலை சீவிக்கொள்ள முடிந்தது.

- 'கயிறு'.

5. மேம்பாலம் தெரிந்தது. நடையின் வேகம் குறைந்து விட்டதை உணர்ந்தான்.
புதிதாகப் போடப்பட்ட விளக்குகள் - தெருவை, தெருவில் போகிற சைக்கிளை, சைக்கிளில் போகிற மனிதர்களை, பஸ்ஸ்டாப்பை, ரிக்ஷாவை எல்லாம் அறைந்து ஆரஞ்சு வண்ணம் பூசுவதைக் கண்டு,சாயங்காலம் போல இருப்பதாகச் சொல்லிக் கொண்டான்.

- 'எதிர்கொள்ளல்'.

6. சுவாரஸ்யம் ஏதுமின்றிக் கழிந்து போய்விட்ட அன்றைய தினத்தை நினைத்தபடி படுக்கையில் கிடந்தான் மூர்த்தி. ஒரு தலையணையையும் பாயையும் படுக்கை யென சொல்லலாமெனில் அவன் படுத்திருந்தது படுக்கைதான்.

- அறியாத முகங்கள்'.

7. இவன் முகத்தை என்ன பார்ப்பது, முகத்தை. முகத்தில் தெரிகிறதா என்ன இவன் செய்கிற
அட்டூழியம்.முகத்தில் என்னவோ சாந்தமான ராயர்களைதான். பவ்யமாக, நெற்றியில் பொட்டு வேறு. அயோக்கிய ராஸ்கலுக்கு அது ஒன்றுதான் குறைச்சல்.
இவன் கெட்ட கேட்டுக்கு ஹிட்லர் மீசைவேறு.அம்மா பேச்சைக் கேட்டுக் கொண்டு
கூத்தடிக்கிற பொட்டைப் பயலுக்கு மீசை ஒரு கேடு - பேமானி. வாழ்க்கையை
ஒவ்வொரு தினமும் நரகமாக்கிக் கொண்டு இருக்கிறான்.

- 'பெரியவர்கள்'.

8. வழக்கம் போல் இருந்தது தெரு. மாவுமிஷின் இரைச்சல். தெருக்கோடியில்
மரத்தடியில் நிழல் வாங்கும் ரிக்ஷாக்கள். சாராயத் தள்ளாட்டம். கிழங்கு விற்கும்
கிழவிகள். சாக்கடையில் கால்வைத்து கோலியடிக்கும் சிறுவர்கள். குந்தியிருந்து
நடக்கிற சூதாட்டம். கைஸ்டாண்டில் சலவைத் துணி சுமக்கும் கடைப் பையன்.
போஸ்டர் தின்னும் பசுமாட்டின் மூத்திரத்தை உத்தரணியில் பிடிக்கும் திவசப்
புரோகிதர்.ரோகம் பீடித்த நகரோரத்தெரு வழக்கம் போல இருந்தது.

- 'சிறுமி கொண்டு வந்த மலர்'.

9. பாலக்காட்டிலிருந்து கோடை விடுமுறைக்கு வந்திருந்த ஒன்றுவிட்ட பெரியப்பாவின்
ஒரே சீமந்தப்புத்திரன், பர்மிடோஸ் மட்டும் அணிந்து கொண்டு, பிதுங்கி வழியும்
இடுப்புச் சதைகளில் கைகளை வைத்தபடி, எருமை மாட்டைப்போல பால்கனியில்
நின்றிருந்தான். கயிற்று நாடாவை உள்ளே போட வேண்டுமென்பதில் கூடக்
கவனம் செல்லாததைப் போலக் காட்டிக் கொள்ளும் கம்ப்யூட்டர் மண்டை.
பர்மிடாஸின் நாடா வேறு பாசக்கயிறு போல ஆடிப் பயமுறுத்திக் கொண்டிருந்தது.

- 'உயித்தெழுதல்'.

10.பல்லாண்டுகளின் உறக்கம் கலைக்கப்பட்டதில் பைல்கள் துவண்டும் படபடத்தும்
சோம்பல் முறித்துக் கொண்டன. ஆரம்ப முனைப்பு மட்டுப்பட்டு, மெல்ல சத்தம் குறையத் தொடங்கி, ஒருத்தர் பின் ஒருத்தராக அன்றாட ஆஸ்திகளை சேகரித்துக்
கொண்டு, பாத்ரூம் கண்ணாடிகளில் சாயங்காலத்துக்கான முகத்தை அணிந்து, சர்வீசுக்கேற்ப
தலைமைகுமாஸ்தாவிடம் சொல்லிக் கொள்ளாமல், சொல்லிக் கொண்டு,கேட்டுக்கொண்டு வெளியேறினர், ஐந்துமணியாகிற சமயத்தில்.

- 'தாசில்தாரின் நாற்காலி'.

- வே.சபாநாயகம்.

No comments: