Saturday, February 24, 2007

உவமைகள் - வர்ணனைகள் - 49

நான் ரசித்த உவமைகள் - வருணனைகள் - 49

அ.முத்துலிங்கம் படைப்புகளிலிருந்து

1. கையிலே கட்டி இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். சற்றுமுன் வரை செவ்வாய்க்கிழமையாக இருந்த நாள் இப்போது உருண்டு புதன்கிழமையாக மாறி விட்டது. ஒரு நாள், தன் பெயரை மாற்றும் சடங்கை அவன் நேருக்கு நேர் கண்டு விட்டான். ஏதோ ஒரு கள்ளனை தனியாய்ப் பிடித்துவிட்ட மகிழ்ச்சி அவனுக்கு ஏற்பட்டது.

- 'ஆயிரம் பொன்'.

2. அந்தப் பெண் தன் இடது பக்க மார்பில் ஜெனிஃபர் என்று பெயர் எழுதி வைத்திருந்தாள். (வலது பக்கத்து பேர் எங்கள் ஊகத்துக்கு விடப் பட்டிருந்தது). கோடுகள் அடித்த தலை மயிர். நீட்டிய சதுர நகங்கள். முற்றுப்புள்ளி இல்லாத வசனம்போல முடிவே இல்லாத கண்கள்.

- 'கனடாவில் சுப்பர் மார்க்கட்'.

3. ஒரு பக்கத்தில் சிறந்த கலாச்சாரப் பதிவுகள் நடக்கின்றன. மறுபக்கத்தில் அர்த்தமற்ற சம்பிரதாயங்களும், மூடநம்பிக்கைகளும் சிலர் வாழ்வில் பரவிக்கிடக்கின்றன. கிணற்றுத் தவளைகள் எங்கேயும் உண்டு. ஆனால் கனடாவுக்கு வந்த தவளைகள் இங்கே கிணற்றையே வெட்டிவிட்டதுதான் ஆச்சரியம்.

- 'கனடாவில் கிணறு'.

4. முன் வரிசைகளில் கதாகாலட்சேபங்களுக்கு உட்காருவதுபோல சிறுவர் கூட்டம் நாற்காலிகளிலும் நிலத்திலுமாக குவிந்துபோய் இருந்தது. நான் விடா முயற்சியாக முன்னேறி, மழைநாள் நாய் ஈர இலைகளை மூக்கால் தள்ளிப் பார்ப்பது போல, ஒவ்வொரு லேஞ்சியாக கிளப்பி கிளப்பிப் பார்த்து ஒரு சீட்டை பிடித்து விட்டேன்.

- 'காத்தவராயனுக்கு காத்திருப்பது'.

5. இவன் 21 வயது இளைஞன். கறுத்து மெலிந்து பந்தல் போடாத பயத்தங் கொடிபோல உயரமாக இருப்பான். அசைந்து அசைந்து நடந்து வரும்போது காற்றிலே நடுவில் முறிந்து விடுவானோ என்ற அச்சம் ஏற்படும்.

- 'பெரிய முள் இரண்டில் வந்தவுடன்'.

6. ஆறில் நின்ற கடிகாரமுள் சட்டென்று ஒன்பதுக்கு நகர்ந்தது போல கிழவர் விறைப்பாக பக்கவாட்டில் திரும்பினார்.

- 'அங்க இப்ப என்ன நேரம்?'

7. சுப்பிரமணியம் மாஸ்டர்தான் எங்களுக்கு பூமி சாஸ்திரம் எடுத்தவர். எவ்வளவு தான் உண்மையை நீட்டினாலும் இவருடைய உயரம் 5 அடி 3 அங்குலத் தைத் தாண்டாது. 20 வயதானதும் இவர் உயரமாக வளர்வதை நிறுத்தி விட்டார்; ஆனால் அகலமாக வளர்வதை நிறுத்தவில்லை. வயது கூடக்கூட அகலமும் கூடியது. நான் பள்ளிக்கூடத்தை விடும் வரைக்கும் அவர் வகுப்பு வாசல்களுக்குள்ளால் வரும்படியான சைஸில்தான் இருந்தார்.

- 'நான் பாடகன் ஆனது'.

8. ஒரு பத்தொன்பது வயது மெல்லிய பையன். காளான் தலை முடிவெட்டு; கிழித்துவிட்ட கால்சட்டை. ஓட்டையை மிச்சம் பிடிப்பதற்காக ஒரு காது ஓட்டையில் மாட்டிய இரண்டு வளையங்கள். ஒரு பொத்தான்களும் போடாமல் திறந்து விடப்பட்ட X அல்லது XL சைஸ் சேர்ட். அந்த சேர்ட்டின் இரண்டு நுனிகளும் கையில் அகப்படாமல் ஒரு பறவையின் செட்டைகளைப் போல படபடவென்று அடித்தன. ஒரு கார்க் கண்ணாடி துடைப்பான் போல தலையை இரண்டு பக்கமும் மாறிமாறி ஆட்டியபடி வந்து கொண்டிருந்தார்.

- 'பாப்பம்'.

9. ஜெனிவீவைப் பார்த்தேன். மேக்கப் என்பதே கிடையாது. ஆனால் முகம் பளிச்சென்று உள்ளுக்கு இருந்து யாரோ வெளிச்சம் அடிப்பது போலப் பிரகாசமாக இருந்தது.

- 'உனக்கு எதிராக ஓடு'.

10. யூடி நட்பான சுபாவம் கொண்டவர். அவர் வயதைக் கேட்கமுடியாது. ஆனால் மதிக்கலாம்.எழுபத்தைந்துக்கு மேலே, எண்பதுக்குக் கீழே. ஒரு செவ்வாய்க் கிழமை காலை என் வீட்டுக்கு காரை ஓட்டிக் கொண்டு வந்தார். அந்தக் காருக்கு அவர் வயதாகி இருந்தது. இதற்கு முன் நான் கேட்டிராத பலவித சப்தங்களை எழுப்பிக் கொண்டு அவருடைய கார் என் வீட்டு வாசலில் வந்து திரும்பியது. நான் ஏறியதும் காரைத் திருப்பி எடுக்க யூடிக்கு சரியாக ஐந்து நிமிடம் பிடித்தது.

- 'சேக்ஸ்பியர் என்னும் சூரியன்'.

(மேலும் வரும்)

- வே.சபாநாயகம்

No comments: