Saturday, February 24, 2007

கடித இலக்கியம் -45

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 45

3, செங்குந்தர் வீதி,
திருப்பத்தூர்.வ.ஆ.

22-3-94

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

ஒருவழியாக, JK மணிவிழா மலருக்கான ஒரு கட்டுரையையும், பசும்பொன் தேவர் மாவட்டம் கிருங்காக்கோட்டையிலிருந்து வெளிவரும் "தொடரும்" என்கிற இதழின் ஆசிரியர் எழுதிக் கேட்டதால், அவருக்கு ஒரு கட்டுரையும் எழுதி அனுப்புகிற பணி, படாதபாடு பட்டு, இன்று மாலைதான் நிறைவுற்றது. இதனிடையில் தாங்கள் அருணாசலத்துக்கு எழுதிய கடித விவரங்களை அறிந்தேன்.

நமது டில்லிப் பயணத்தை அசை போட்டு அது பற்றி எழுதுங்கள். ரிஷிகேஷ், ஹரித்வார் போட்டோக்களை அருணாசலம் முதற்கொண்டு அனைவரும் பாராட்டினர். இரவு பூராவும் செய்த களைப்புமிக்க பயணத்துக்குப் பிறகும், ரிஷிகேஷில் நாம் எவ்வளவு புத்துணர்ச்சியோடு குளுகுளுவென்றிருக்கிறோம் பார்த்தீர்களா? அந்தப் போட்டோக்களை நானும்கூட இன்னும் பார்த்து முடியவில்லை. தாங்கள், JK ஹரித்வாரில் கங்கையில் குளிக்கும் போட்டோ ஒன்றை எனக்கு அனுப்பி உதவ வேண்டும் - நண்பர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக!

ஒய்வு பெற்ற பின்பு தங்களுடைய ஒவ்வொரு நாளும் அலாதியான அழகோடு கழிவதை நண்பர்களுக்கு அடிக்கடி கூறிக் கொண்டிருக்கிறேன். இயன்ற பயணங்களுக்கு எல்லாம் தங்களை இனிமேல் இழுக்கலாம் என்று ஆசை பிறக்கிறது. பாப்பா வசிக்கும் செஷல்ஸ்தீவுக்குச் சென்று வாருங்கள். புதிய வானத்தின் வேறொரு புறத்தில் உள்ள ஒரு புதிய கடலின் எதிரே, பாப்பாவுக்கு நீங்கள் எங்கள் ஆசிகளைக் கூறுகிற பொழுது, எங்கள் ஆசிகளும் மந்திரத்தொனி கொண்டு புதிதாய் ஒலிக்கக் கடவன.

உங்களது நாவல் 'ஒரு நதி ஓடிக் கொண்டிருக்கிறது' - புத்தக வேலைகள் முழுமை பெற்றுவிட்டனவா? நமது டில்லிப் பயணம் பற்றி வீட்டிலுள்ளவர்களுக்கு, சுவைபட நிறையச் சொன்னீர்களா?

JK 25-3-94 வெள்ளி இரவில் ஜோலார்ப்பேட்டையைக் கடக்கும் சேரன் எக்ஸ்பிரஸில் கோவை போகிறார். அநேகமாக நானும் கூடப் போகவேண்டியதாய் இருக்கும். ஞாயிறு இரவு அதே வண்டியில் திரும்புகிறோம். இன்ஷாஅல்லாஹ்!

ஒரு கடிதம் எழுதுங்கள்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி

ஒரு பின்னிணைப்பு:

சில வெண்பாக்கள் கிறுக்கினேன். உங்கள் மாதிரி நெருக்கமானவர்களோடு அதைப் பங்கிட்டுக் கொள்ள மனம் விழைகிறது.

பொய்....பொய்.....பொய்


நின்றதுபொய் பார்த்ததுபொய் நெஞ்சைமெலத் தொட்டுவிட்டுச்
சென்றதுபொய் ஆனால் செகமும்பொய் - இன்றுமுதல்
தெய்வமும் பொய்யாம் தெரிந்துகொண் டேனெல்லாம்
பொய்யினும் பொய்யாகும் போ!

சொன்னவை பொய்உன் சுடர்விழி வீசிய
மின்னலும் பொயுன்றன் மென்னடை - இன்முகம்
கன்னிகை நாணம் கருத்தை அறிவித்த
புன்னகை யாவுமே பொய்!

வாழ்வுபொய் நீயதில் வந்ததுபொய் நம்பிய
ஊழ்வினைப் புண்ணியம் ஓர்பொய்யே - ஏழேழ்
பிறவிக்கும் பற்றாகும் பேரன் பெனும்சொல்
வெறும்பொய்யே அன்றிவேறு என்?

- பி.ச.கு

No comments: