Wednesday, December 24, 2003

நினைவுத் தடங்கள் - 7

மஹாத்மாவின் மரணம் ஏற்படுத்திய பாதிப்பில் தன்னிச்சையாக எழுந்த ஆவேச உணர்வில் எழுதிய கட்டுரை மேலும் எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதை வெளிப்படுத்த எல்லோரையும் போல கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை ஒன்பதாம் வகுப்பில் படித்த போது தொடங்கினேன். `ஒளி` என்று அதற்குப் பெயர். நான் ஓவியமும் வரைவேன் என்பதால் அட்டைப்
படம் முதல் எல்லாவற்றிற்கும் நானே படம் போட்டேன். கோடு போடாத வெள்ளை 40 பக்க நோட்டை வாங்கி,நோட்டுப் புத்தகமாகத் தெரியக்கூடாது என்பதற்காக அகலத்தைக் கொஞ்சம் குறைத்து வெட்டி டிராயிங் நோட்டுத் தாளை அட்டைத்தாளாகத் தைத்து இதழை உருவாக்கினேன். அப்போது எங்கள் வீட்டில் கல்கி இதழ் வந்து கொண்டிருந்ததால், அதுதான் எனக்கு வழிகாட்டியாயிற்று. கதை, கட்டுரை, கவிதை பொன்மொழிகள், கார்ட்டூனெல்லம் இருந்தது அதில்.என்ன ஒரு பிரச்சினை என்றால் எல்லவற்றையும் நானே வெவ்வேறு பெயரில் எழுத வேண்டியிருந்தது.


அதனால் என் வகுப்பில் படித்த தமிழ் ஆர்வம் மிக்க ஒரு மாணவருக்கு எனக்குத் தெரிந்த ஆசிரியப்பா, வெண்பா எழுதும் முறைகளை அவருக்குச் சொல்லிக் கொடுத்து அவரையும் கவிதைகள் எழுத வைதேன். ஆறுமுகம் என்ற அந்த நண்பர் முனைவர் ஆறுமுகமாகி திருக்குறள் அறிஞாரகவும் சிறந்த மரபுக்கவிஞரகராகவும் இன்று விளங்குக்¢றார். 1949ல் `ஒளி`யில் அவர் எழுதிய கவிதை ஒன்றை அவரது சுய சரிதைக்காக 50 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் நான் பாதுகாத்து வைத்திருக்கிற `ஒளி` யின் இதழ் ஒன்றிலிருந்து அவரது கவிதை ஒன்றை நான் பிரதி எடுத்து அனுப்பியபோது அவர் பரவசமும் நெகிழ்ச்சியும் மிக்கவராய் நன்றி தெரிவித்து எழுதினார்.பள்ள்¢ இறுதியாண்டின் மத்திவரை 2 ஆண்டுகள் போல `ஓளி` வெள்¢வந்தது. இறுதித்தேர்வைப் பாதிக்கும் என்பதால் என் மீது அக்கறை கொண்ட ஆசிரியர் ஒருவரது அறிவுரையின்படி இதழ் நிறுத்திவைக்கப் பட்டது.


அப்போது ஆறாம் வகுப்பில் தமிழாசிரியராக இருந்த வித்வான் சாம்பசிவ ரெட்டியார் முதனிலைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்று எங்களுக்குப் பள்ளி இறுதியாண்டில் தமிழ் கற்பிக்க வந்தார். அது என் எழுத்து வெளிப்பாட்டுக்கு முக்கியத் திருப்பமாக அமைந்தது. அவர் தன் கல்வித் தகுதியை மட்டும் உயர்த்திக் கொள்ளவில்லை; தன் நடை, உடை பாவனைகளையும் மாற்றிக் கொண்டு வந்திருந்தார். தமிழாச்¢ரியர் என்றால் ஜிப்பா,தோளில் மடித்துப் போட்ட அங்கவஸ்திரம் என்ற மரபுத்
தோற்றத்தை மாற்றி பேண்ட், புஷ் ஷர்ட்,கட் ஷ¥ என்று ஆங்கிலபாணி உடையில் முதன் முதல் எங்கள் பள்ளி இறுதி வகுப்பில் அவர் நுழைந்த போது நாங்கள் வெகுவாகக் கவரப்பட்டோம். தோற்றத்தில் மட்டுமல்லாமல் போதனையிலும் அவர் வித்தியாசமாகத் தெரிந்தார்.


கம்பராமாயணத்தையும்,வில்லிபாரத்தையும்,பாரதியையும்,பாரதி தாசனையும் இசையோடு அவர் நடத்தினார். பாரதி தாசனின் `காலை இளம் பரிதியிலே அவளைக் கண்டேன்...`என்ற `அழகின் சிரிப்பு` பாடலும் தசரதன் கைகேயிடம் ராமனைக் காட்டுக்கு அனுப்பும் வரத்தை மட்டும் கைவிடக் கோரி இறைஞ்சும் பாடல்களும் இன்னும் என் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக் கின்றன. அவர் ஒரு எழுத்தளராகவும் ஆகி இருந்தார் என்பது கூடுதல் கவர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் அப்போதைய - நாரண துரைக்கண்ணனின் `ஆனந்த போதினி` யில் இலக்கியக் கட்டுரைகள் எழுதி வந்தார். அந்த ஆர்வத்தில் அப்போதைய தமிழ் ஆசிரியர்களிடமிருந்து மாறுபட்டவராக, எங்களது எழுத்துத் திறனையும் வளர்க்கும் நோக்கத்தில் ` கலைப் பயிர்` என்ற ஒரு கையெழுத்துப் பத்திரிகையைப் பள்ளி சார்பில் தொடங்கினார். எனது கையெழுத்துப் பத்திரிகை அனுபத்தால் பத்திரிகை ஆசியக்குழுவில் என்னையும் சேர்த்திருந்தார். இதற்கும் நான் தான் ஓவியன். கதையும் எழுதித் தரும்படி ஊக்க மூட்டினார். என் ஆரம்பப் பள்ளி வீரசைவ ஆசிரியரின் அர்ப்பணிப்பான பணியை வெளிப்படுத்தும்படி `எங்கள் வாத்தியார்` என்ற நடைச் சித்திரம் போன்றதொரு கதையை கொஞ்சம் நகைச்சுவையுடன் முதல் இதழுக்கு எழுதிக் கொடுத்தேன். தமிழாசிரியர் அதை வெகுவாகப் பாராட்டி அறிமுக உரையில் எழுதியதுடன் `இந்தக் கதையைப் பத்த்¢ரிகைக்கு அனுப்பினால் பிரசுரமாகும். இந்த மாணவன் நல்ல எழுத்தாளனாக வர வாய்ப்பிருக்கிறது` என்று குறிப்பிட்டிருந்தார். எத்தனை ஆசிரியருக்கு அப்படிப் பட்ட பரந்தமனம் இருக்கிறது?

அவர் பாதையில் நான் ஆசிரியரான போது இன்றைய கவிஞர் பழமலய் ஒன்பதாம் வகுப்பில் `மலை`என்ற கைஎழுத்துப் பத்திரிகை நடத்தியபோது நான் பாராட்டி `உன்னுள் கவிதை ஊற்று இருக்கிறது. தோண்டத் தோண்ட அது பிரவகித்து ஒரு நல்ல கவிஞனாய் எதிர்காலத்தில் பிரகாசிக்க வைக்கும்` என்று எழுதி உற்சாகப்படுத்தினேன். அதை இன்று புகழ் பெற்ற கவிஞரான நிலையிலும் , நான் என் ஆசிரியரைக் குறிப்பிடுவதுபோல அவர் நன்றியோடு சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் தமிழாசிர்¢யரைத் தனிமையில் சந்தித்து எப்படி என் கதையைப் பத்திரிகைக்கு அனுப்புவது என்று கேட்டேன். அவரது வழிகாட்டலின்படி பிரதி எடுத்து `ஆனந்த போதினி`க்கு அனுப்பி வைத்தேன். பிறகு இறுதித் தேர்வுக்கான செலக்ஷன் பரீட்சைக்கு (அப்போதெல்லாம்
எஸ்.எஸ்.எல்.சி பரிட்சைக்கு முன் செலக்ஷன் தேர்வு என்றொரு கண்டமுண்டு. 1959ல் தான் அதை நீக்கினார்கள்) தயார் செய்யும் நெருக்கடியில் கதை பற்றி மறந்து போனேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் மாலை தமிழாசிரியர் என்னை வீட்டுக்கழைத்து அவருக்கு சந்தா கட்டியதால் வரும் அந்த மாதத்தின் (அக்டோபர்- 1950) `ஆனந்த போதினி`யில்
வெளியாகி இருந்த என் கதையைக் காட்டினார். அப்போது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கை எப்படிச் சொல்வது? பள்ளி இறுதி வகுப்பை முடிப்பதற்குள்-அதிலும் முதல் கதையே பிரசுரமாவது என்றால் எப்படிப் பரவசம் உண்டாகும் என்பதை, கல்லூரிக்குப் போன பின் காண்டேகரைப் படித்தபோது அவர் எழுத்தில் கண்டேன். அவர் எழுதினார். `முதல் காதல், முதல் பிரசவம், முதல் கதை-இவற்றிற்குத் தனிப்பரவசம் உண்டு`.அன்றே நான் பள்ள்¢யின் ஹீரோ ஆநேன். கதை வந்த இதழை ஒரு மாதம் தலைக்கடியிலேயே வைத்துக் கொண்டு தூங்கினேன் என்றால் கேட்பவர் களுக்குச் சிரிக்கத்தான் தோன்றும்.அச்சில் என் கதை வந்து நான் எழுத்தாளனாக அங்கீகாரம் ஆனதற்கு என் தமிழாச்¢ரியர் வித்வான் சாம்பசிவ ரெட்டியாரையும், பள்ளி மாணவன் என்று உதாசீனப் படுத்தாது வெளியிட்டு உற்சாகப்படுத்திய நாரண துரைக்கண்ணன் அவர்களையும் நான் என்றும் மறக்கவியலாது. அதோடு இன்று முன்னணியில் இருக்கிற அனேக பிரபல எழுத்தாளர்கள்-ஜெயகாந்தன் உட்பட, `ஆனந்த போதினி`யில் தொடங்கியவர்கள் என்பதைப் பலர் அறிந்திருக்க முடியாது.

- தொடர்வேன்.
- வே.சபாநாயகம்.

No comments: